10 வருடங்களுக்குப் பிறகு வரவேற்பைப் பெற்ற வாமிகா கபி
பஞ்சாப் மாநிலம் சண்டிகரைப் பூர்வீகமாகக் கொண்டவர் வாமிகா கபி. சிறுமியாக சில ஹிந்திப் படங்களில் நடித்தார். பின்னர் 2013ல் வெளிவந்த பஞ்சாபி படமான 'மேரா 22 மைன் தேரா 22' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில பஞ்சாபி படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
2016ல் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய 'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி மொழிகளில் நடித்தார். சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு 'டிசி' படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாமிகாவுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். படம் ஓடும் தியேட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் பாராட்டினர். அவர்களது பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் வாமிகா.
படம் நிச்சயம் 50 கோடி வசூலை எட்டும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் ரவி மோகன் நாயகனாக நடிக்கும் 'ஜீனி' படத்திலும் நடித்துள்ளார் வாமிகா. ஆனால், அந்தப் படம் எப்போது வெளியாகும் என்பதுதான் தெரியவில்லை.