பிரேமலு படத்திற்கு முன்பே உருவான கதை தான் பெத்லகேம் குடும்ப யூனிட்
கடந்த 2024-ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் 100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மமிதா பைஜூ இன்று முன்னணி கதாநாயகி வரிசைக்கு உயர்ந்துள்ளார். தற்போது இதே இயக்குனரின் இயக்கத்தில் மமிதா பைஜூ மற்றும் நிவின்பாலி இணைந்து நடித்துள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்த நிலையில், படத்தின் இணை எழுத்தாளர் கிரண் ஜோசி இந்த படம் குறித்து கூறும்போது, பிரேமலு படம் எடுப்பதற்கு முன்பே இந்த யோசனை இயக்குனர் கிரிஷின் மனதில் இருந்தது. படத்தின் டைட்டிலும் அப்போதே முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, கதாநாயகனாக நிவின்பாலிதான் நடிக்க வேண்டும் என்பது வரை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் அவர் பிரேமலு படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நான் ஏற்கனவே மனதில் உருவாக்கி வைத்திருந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தை இயக்க முடிவு செய்தார். தான் நினைத்தது போலவே நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து, தன்னுடைய வெற்றி நாயகியான மமிதா பைஜூவையே இதிலும் கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.