PUBLISHED ON : ஆக 02, 2026 12:36 AM

'ஆடம்பர பங்களாவுக்கு ஆசைப்பட்ட அரசியல்வாதிகள், இப்போது, அந்த வார்த்தையைக் கேட்டாலே அலறுகின்றனர்...' என்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம், ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 'போதி பெவிலியன்' என்ற பங்களாவை, மக்களிடம் குறை கேட்கும் இடமாக பயன்படுத்தி வருகிறார். இதை, எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதி கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக பதவி வகித்தபோது, பல கோடி ரூபாய் செலவில், முதல்வர் பங்களாவை ஆடம்பரமாக புதுப்பித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அதன்பின் நடந்த தேர்தலில், கெஜ்ரிவால் ஆட்சியை இழந்தார்.
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்தபோது, விசாகப்பட்டினத்தில், தன் சொந்த பயன்பாட்டுக்காக, அரசு நிதியில் சொகுசு பங்களா கட்டியதாக புகார் எழுந்தது. அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியும் ஆட்சியை பறிகொடுத்தார்.
இதனால், ரேவந்த் ரெட்டியும் கலக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அந்த பங்களாவை சுற்றிக் காட்டினார். 'இந்த வீட்டில் ஆடம்பர வசதிகள் எதுவும் இல்லை...' என, விளக்கமும் அளித்தார்.
தெலுங்கானா மக்களோ, 'அரசியல்வாதிகளுக்கு நம் மீது பயம் இருப்பது நல்ல விஷயம் தான்...' என்கின்றனர்.
