PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM

'வழக்கமாக இப்படி கொந்தளிக்க மாட்டாரே... இப்போது மட்டும் ஏன் இப்படி...?' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும், காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. பெரும்பாலான மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்விதான். கர்நாடகா, தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில் தொடர் தோல்வியே பரிசாகக் கிடைத்தது.
இதனால்தான், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல், 'எம்.பி.,யாக மட்டும் இருந்து விட்டுப் போகிறேன்...' என, விரக்தியுடன் கூறினார். இதுபோன்ற நேரங்களில் கூட, கட்சியினர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் கூறியதில்லை.
ஆனால், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த காங்., நிகழ்ச்சியில், ராகுலின் புதிய முகத்தை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'இங்கு, நம் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் சிலர், பா.ஜ., ஆதரவாளர்களாக உள்ளனர்.
'காங்கிரசில் இருந்தபடியே பா.ஜ.,வுக்காக வேலை செய்கின்றனர். இவர்கள், தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கட்சியில் இருந்து துாக்கி எறியப்படுவர்...' என, ஆவேசத்துடன் பேசினார்.
'ராகுல், இதுபோல் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. பாவம், எத்தனை துரோகங்களை தான், அவர் சந்திப்பார்...' என, முணுமுணுக்கின்றனர் குஜராத் காங்., நிர்வாகிகள்.