PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:29 AM

'இருக்கும் தலைவர்களையாவது தக்கவைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது...' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி, பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.
டில்லியில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது. அன்றிலிருந்து ஆம் ஆத்மிக்கு இறங்கு முகம் தான்.
கடந்த ஏப்ரலில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு ராஜ்யசபா எம்.பி.,க்கள், திடீரென அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் ஐக்கியமாகினர். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் வந்த கெஜ்ரிவால், 'சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், மீண்டும் பகவந்த் சிங் மான் தான் முதல்வர்; அதில் எந்த மாற்றமும் இல்லை...' என்றார்.
'பகவந்த் சிங் மானும் பா.ஜ.,வுக்கு ஓடி விடுவாரோ என்ற பயத்தில் தான், முன்கூட்டியே அவரை முதல்வர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அதற்குள் பகவந்த் சிங் மான் மனம் மாறாமல் இருப்பாரா என்பது சந்தேகம் தான்...' என்கின்றனர், பஞ்சாப் மக்கள்.
