PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: விஜயதரணி காங்., கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம். அரசியல், பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்தி தான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மை தான். அதற்காக, கொள்கையில் இருந்து மாறுவது சரியல்ல.
டவுட் தனபாலு: விஜயதரணியின் குற்றச்சாட்டை ஏத்துக்கிறேன்னு சொல்றதன் மூலமா, 'கரூர் தொகுதியில மறுபடியும் சீட் தரலைன்னா, நானும் விஜயதரணி பாதையை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்'னு தலைமைக்கு நாசுக்கா எச்சரிக்கை விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: பா.ஜ., கூட்டணியில் 10 ஆண்டுகளாக இருக்கிறோம். அ.தி.மு.க., கட்சி விவகாரத்தில், நீதிமன்றத்தால் பழனிசாமிக்கு வழங்கப்பட்டிருக்கும், அனைத்து தீர்ப்புகளும் தற்காலிகமானவை. தேர்தல் ஆணையத்தில், இரட்டை சிலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். வரும் லோக்சபா தேர்தலில், நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
-டவுட் தனபாலு: இரட்டை இலை சின்னத்துல நின்றும், 1980 லோக்சபா தேர்தலில் எம்.ஜி.ஆரும், 1996, 2006ல் ஜெ.,யும், 2021ல் பழனிசாமியும் தோல்வி அடைஞ்சிருக்காங்களே... இந்த வரலாறு தெரிஞ்சும், இரட்டை இலை கிடைச்சா, வெற்றி நிச்சயம்னு, 'டவுட்' இல்லாம எப்படி நம்புறீங்க?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இந்தியாவை, அரை நுாற்றாண்டு கள் ஆண்டுவிட்டு, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க காங்., முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்துகிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்? தேர்தல் வரும் போது தான், அனைவர் மீதும் பாசம் வருகிறது; இவை அனைத்தும் நாடகங்கள்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆட்சியில இருக்கிறப்ப எல்லாம் எதுவும் செய்யாம இருந்துட்டு, இப்ப, 'அதை செய்வோம், இதை செய்வோம்'னு வாயால வடை சுடுவது எல்லாம், மக்களை முட்டாளாக்கும் முயற்சிகள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

