PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நம் கட்சி, அடுத்த நுாறாண்டுகளுக்கு பயணிக்க வேண்டிய திசையை தீர்மானிக்க வேண்டியதும், தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமை தொண்டனான என் கடமை. அதற்காகவே, 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, தொகுதி வாரியாக சென்று, தொண்டர்களின் கருத்துகளை அறிந்து வர சொன்னேன். தொண்டர்கள் எண்ணங்களின் அடிப்படையில், கட்சியை மறு கட்டுமானம் செய்ய, இளமையும் அனுபவமும் கலந்த மறுசீரமைப்பு ஆலோசனை குழுவையும் அமைத்துள்ளேன்.
டவுட் தனபாலு: கட்சியை மறு கட்டுமானம் செய்ய நினைக்கும் உங்க முயற்சியை பாராட்டலாம்... அதே நேரம், கட்சியில் உங்க குடும்பத்தினர் ஆதிக்கம் இல்லாம, தலைமை பதவிகளுக்கு எல்லாரும் வரணும்னு தொண்டர்கள் கருத்து சொல்லியிருந்தால், அதை ஏற்று அமல்படுத்துவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
----------
தமிழக மீன்வள துறை அமைச்சர் ஸ்ரீநாத்: தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது முதல்வர் விஜயின் கனவு. போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அரசும், அதிகாரிகளும் பார்த்து கொள்வர் என விட்டுவிடக் கூடாது. நண்பர்கள், உறவினர் என நம்மை சுற்றியுள்ளவர்களை, நாம் சரியாக வழிநடத்த வேண்டும். நாம் அனைவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், போதை இல்லாத நாட்டை உருவாக்க முடியும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆனா, 'டாஸ்மாக்' மற்றும் மனமகிழ் மன்றங்கள் மூலம் தமிழகம் முழுக்க மதுபானங்களை விற்பனை பண்ணிட்டு, இந்த மாதிரி வசனம் பேசுறது தான் இடிக்குது... ஒரே கையெழுத்தில், அவற்றை எல்லாம் உங்க முதல்வர் விஜய் இழுத்து மூடினால் தான் அவரது கனவு நனவாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
-----------
தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்: தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வற்புறுத்தப்பட்டதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார். அவரை போன்றவர்கள் வந்துதான், த.வெ.க., ஆட்சியை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... 'ஏற்கனவே அ.தி.மு.க.,வின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள், தங்களது பதவிகளை ராஜினாமா பண்ணிட்டு எங்க பக்கம் வந்துட்டாங்க... அடுத்தும் சிலர் வர இருக்காங்க என்பதால், வாய் துடுக்கா பேசக்கூடிய அனிதா ராதாகிருஷ்ணன் எங்களுக்கு தேவையில்லை'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
