PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசுவது முதல்வர் விஜய்க்கு முறையல்ல. இப்படித்தான் ஒரு காலத்தில், 'எங்களை விட்டால் ஆளே இல்லை' என, காங்கிரஸ் சொன்னது. அந்த கட்சி தோற்காமலா போய் விட்டது? சொந்த பலம் இல்லாமல், ஊரான் பலத்தில் இருக்கிறவருக்கு இவ்வளவு தர்பார் தேவையில்லை.
டவுட் தனபாலு: காங்கிரஸ் அப்படி சொல்லி, 50 வருஷங்களுக்கு மேல இருக்கும்... ஏன் உங்க தலைவர் ஸ்டாலினே, '2026 தேர்தலில் வென்று, 2031 தேர்தலிலும் ஜெயிப்பேன்'னு பிரசாரத்தில் ஜம்பமா பேசி, கடைசியில அவரே கொளத்துார்ல தோற்று போகலையா...? அதை உதாரணம் காட்டாதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!
----
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கரூரில் முதல்வர் விஜய், வழக்கம்போல வசனகர்த்தா கொடுத்த, 'ஸ்கிரிப்ட்' படி முழங்கி தள்ளியுள்ளார். தன் தவறை உணராமல், காவல் துறை மீது பழி போடுவது, 'பஞ்ச் டயலாக்' அடிப்பது, 'தில் இருக்கா, திராணி இருக்கா' என, அநாகரிக பேச்சை வெளிப்படுத்தி உள்ளார். தீர்ந்து போன சக்தியில் இருந்து, குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வரே, உங்கள் கட்சியினர் செய்யும் முறைகேடுகள், தினமும் செய்திகளில் வருவதை முதலில் கவனியுங்கள்.
டவுட் தனபாலு: தினமும் நாலு முறை பேட்டி தந்துட்டு இருந்த இவரை, கொஞ்ச நாட்களா காணவே இல்லையே... அ.தி.மு.க.,வில் நீடிப்பதா, வேண்டாமான்னு இத்தனை நாட்களா ரூம் போட்டு யோசனை பண்ணிட்டு, அ.தி.மு.க.,விலேயே நீடிக்கும் முடிவை எடுத்துட்டு, த.வெ.க.,வை விமர்சிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
----
பா.ம.க., தலைவர் அன்புமணி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த, 31 பேருக்கு முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியுள்ளார்; இது வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு, 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, 1987ல் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும், 25 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. அவர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: அடுத்து, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவங்களின் வாரிசுகளுக்கும் தி.மு.க.,வினர் அரசு வேலை கேட்பாங்களே... அது இருக்கட்டும்... உங்க கட்சி வளர்ச்சிக்கு காரணமான, அந்த 25 பேரின் குடும்பங்களுக்கு நீங்க இத்தனை வருஷங்களா எதுவுமே செய்யாதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
