PUBLISHED ON : ஆக 16, 2026 01:22 AM

ஹிந்து முன்னணி தமிழக தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: 'ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளுக்கு வருவோர் சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்' எனும் விதி அமலில் உள்ளது. தற்போது, இந்த விதியை தளர்த்தி, வருவாய் உட்பட பிற துறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில் நிலங்கள் கொள்ளை போவது உட்பட பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள, உயர் பொறுப்புகளில் இருப்போர் சட்டம் படித்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதி இயற்றப்பட்டது. த.வெ.க., அரசின் இந்த முடிவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: குறிப்பிட்ட மதத்துக்கு சாதகமாக த.வெ.க., அரசு செயல்படுவதாக, ஏற் கனவே ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டிட்டு இருக்காங்க... இதுபோன்ற முடிவுகள், அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானோ என்ற, 'டவுட்'டை தான் கிளப்பும்!
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும், பார்லிமென்டில் சம வலிமையுடன் ஒலிக்கும். 'தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, மத்திய அரசின் சீர்திருத்தங்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'மத்திய பா.ஜ., அரசு எது செஞ்சாலும் எதிர்க்கணும்' என்ற கொள்கையை, கடந்த தி.மு.க., அரசும் பின்பற்றியது... அதனால், தமிழகத்துக்கு கிடைத்த லாபத்தை விட நஷ்டங்களே அதிகம்... த.வெ.க., அரசும் அதே வழியில் பயணிப்பது, மாநில நலனுக்கு எதிராகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலத்தின் வயநாடு எம்.பி., பிரியங்கா: ராமர் கோவில் நன்கொடை திருட்டு பற்றி பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், மத்திய அரசு பதிலளிக்க மறுக்கிறது. லோக்சபா தேர்தல் வரை, ராமர் கோவிலை வைத்து அரசியல் ஆதாயம் தேடிய அவர்கள், தற்போது அது மாநில பட்டியலின் கீழ் வருவதாக கூறுவது ஏற்புடையதல்ல.
டவுட் தனபாலு: உங்க கேள்வி நியாயமானது தான்... அதேநேரம், கர்நாடக மாநில காங்., ஆட்சியாளர்கள், காவிரி பிரச்னையில் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுறாங்களே... உங்க கட்சியின் தேசிய தலைவர்கள், அவங்களுக்கு அறிவுரை கூறி திருத்தாம, 'இது ரெண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை' என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது மட்டும் சரியா என்ற, 'டவுட்' வருதே!
