PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வில் முக்கிய புள்ளியாக திகழ்ந்து, மன கசப்பால் அக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
அரசியலில் ஜொலிக்க, தி.மு.க.,வின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளம் ஏற்றினார். ஆனாலும், தமிழகத்தில் முக்கியத்துவம் பெற முடியாமல், பத்தோடு பதினொன்றாகி போனார்.
பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் பார்த்து விட்டார். பெரிதாக வரவேற்பு இல்லை என்றதும், மானம், ரோஷம் பார்த்தால் கரை சேர்வது கஷ்டம் என நினைத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடமே சரணாகதி அடைந்தார்.
கருணாநிதி மறைவிற்கு பின், ஸ்டாலின் கரம் வலிமை பெற, பல்லக்கு துாக்கியாகவே மாறிப்போனார். என்ன செய்வது அரசியல் வியாபாரம் நடக்க வேண்டுமே...
மேடைகளில் காட்டும் வாய் வீரத்தை, கட்சியில் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், வீட்டில் சாய்வு நாற்காலியில் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு அல்லவா அமர்ந்திருக்க வேண்டும்!
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., ஏறுமுகம் கண்டாலும், தற்போது, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான், கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரமே கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற, இப்போதே தி.மு.க.,விற்கு காவடி துாக்க ஆரம்பித்து விட்டார், வைகோ.
அதற்கு பக்கவாத்தியமாக, மஹாபாரதத்தில், கண்ணனிடம் பாஞ்சாலி அபயம் கேட்டதுபோல், ஸ்டாலினை நோக்கி அபயக்குரல் எழுப்பியுள்ளார், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ.
ம.தி.மு.க.,வின் மானம் காக்குமா அல்லது ராஜ்யசபா சீட்டிற்கு போட்டது போல், இதிலும், தி.மு.க., பட்டை நாமம் போடுமா என்பது தொகுதி அறிவிப்பிற்கு பின் தெரியும்!
ஆளுங்கட்சி ஆணையர்களால் நீதி கிடைக்குமா?
கோ.பாண்டியன்,
செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
மாநில தகவல் ஆணையர்களாக இருவரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார், தமிழக
கவர்னர். அதில் ஒருவர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன்; மற்றொருவர்
கர்நாடக நீதிமன்றங்களில் தி.மு.க., வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்.
தங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வோரையே தகவல் ஆணையர் நியமனத்திற்கு பரிந்துரை செய்கின்றனர் ஆட்சியாளர்கள்.
இதனால்,
பொதுமக்களுக்கு அலுவலர்கள் சரியாக தகவல்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக,
முதல் மேல் முறையீடு, இரண்டாம் மேல் முறையீடு என, உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மாநில தகவல்
ஆணையத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள்
வருகின்றன. இம்மனுக்கள் மீது வரிசைப்படி விசாரணை மேற்கொள்ள, ஓரிரு ஆண்டுகள்
ஆகின்றன.
அவ்வாறு காலம் தாழ்த்தி விசாரிக்கப்பட்டாலும், முடிவுகள் பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாகவே முடித்து வைக்கப்படுகின்றன.
இதனால், தகவல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.
தகவல்
ஆணையத்தில் தற்போது, ஓய்வு பெற்ற உயர் காவல் துறை அதிகாரிகள் இருவர்,
இந்திய நிறுவன சட்ட சேவையான ஐ.சி.எல்.எஸ்., அதிகாரி ஒருவர், மூன்று
வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் உள்ளனர்.
இவர்களில் பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க கூடிய நீதித் துறையை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.
மேலும்,
வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமிப்பதால், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களின்
வெற்றிக்காக வாதாடுவார்களே அன்றி, நீதிக்காக வாதாட மாட்டார்கள்.
எனவே,
மாநில தகவல் ஆணையத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் பணியில் உள்ள
நீதிபதிகளை நியமித்தால் தான் பாரபட்சமற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்!
ஆக்கிரமிப்புக்கு அரசு கொடுக்கும் பரிசு!
ஆர்.கிருஷ்ணசாமி,
புதுச்சேரி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீர்நிலைகளை
ஆக்கிரமித்துள்ளோரை தயவு தாட்சண்யம் பாராமல் வெளியேற்ற நீதிமன்றம்
சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி, அதிகாரிகள் அகற்றி கொண்டிருந்த போதே, அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுத்து மகிழ்வித்தது.
பொதுவாகவே,
புறம்போக்கு நிலமோ, நீர்நிலைகளோ நாலு ஆணிகள் மற்றும் ஒரு கோணியைக் கொண்டு
ஆக்கிரமித்து விட்டால், என்றாவது ஒருநாள் அந்த ஆக்கிரமிப்பாளர்களை அரசு
அரவணைத்து, குடியிருப்புக்களை கட்டிக் கொடுத்து விடுவது தமிழகத்தில் தொன்று
தொட்டு வரும் நடைமுறையாகவே உள்ளது.
இந்நிலையில், 'தமிழகம்
முழுதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த
உத்தரவை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில்
ஆஜராக நேரிடும்' என உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
இப்படி
கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுக் கொண்டிருக்க,
சந்தடியில்லாமல், சென்னையில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு இடங்களை
ஆக்கிரமித்து வசிப்போருக்கு, 3.90 லட்சம் சதுர அடி நிலத்திற்கு வீட்டு மனை
பட்டா வழங்க சென்னை பெருநகர மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கி,
ஆக்கிரமிப்புக்கு பச்சைக் கொடி காட்டிஉள்ளது.
நீதிமன்ற உத்தரவையும், மாநகராட்சியின் அனுமதியையும் நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை.
இங்கு,
ஆக்கிரமிப்பாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். ஆனால், சட்ட
திட்டங்களை மதித்து, தொழில், வருமான வரி, தண்ணீர், மின்கட்டணம், வீட்டு வரி
உட்பட அனைத்தையும் முறையாக செலுத்துவோர் நசுக்கப்படுகின்றனர்.
காரணம், ஆக்கிரமிப்பாளர்கள், தேர்தலின் போது கண்களை இறுக மூடிக்கொண்டு, ஆளுங்கட்சிக்கு ஓட்டளிப்பர்.
நடுத்தர
வர்க்கத்தினரோ ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுச்சாவடி பக்கம் தலையை
காட்டமாட்டார் கள். அதனால் தான் முன்னவருக்கு பரிசு; பின்னவர்களுக்கு
அபராதம்!
போகிற போக்கைப் பார்த்தால், போர் நினைவுச் சின்னம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஓமந்துாரார் அரசினர் தோட்டம், ரிப்பன் மாளிகை,
எழிலகம், குறளகம் போன்ற இடங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் அத்துமீறி
குடியேறினால், அவற்றையும் அவர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பர் போலும்!