Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இதுதான் சமநீதியா?

இதுதான் சமநீதியா?

இதுதான் சமநீதியா?


PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.வெற்றிவேந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் வாயிலாக, கிராமங்களில் பணப்புழக்கம் இருந்தது. நான்கு மாதங்களாக மத்திய அரசு அத்திட்டத்தில் நிதி தர மறுக்கிறது. மக்களிடம் வேலை வாங்கிவிட்டு, உரிய சம்பளம் வழங்க முடியவில்லை. மத்திய அரசுக்கு ஆறரை லட்சம் கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறோம். ஆனால், அவர்கள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத்தான் நமக்கு திருப்பி தந்துள்ளனர். குறைவாக வரி செலுத்தும் மற்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகின்றனர். இதுதான் மாநிலங்களுக்கான சமநீதியா?' என்று கேட்டுள்ளார், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்.

நுாறு நாள் வேலை திட்டத்தின் அடிப்படையே, பணியாளர்களுக்கான ஊதியத்தை, மாநில அரசு முதலில் கொடுத்து விட வேண்டும்; பின், மத்திய அரசு அதற்குரிய தொகையை வழங்கும் போது, வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்!

இதுகூட தெரியாத பெரியகருப்பன், 'மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை; அதனால், வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை' என்று ஓர் உருட்டு உருட்டியுள்ளார்.

மத்திய அரசு மீதுதான் தவறு என்றே வைத்து கொள்வோம்... இங்கு, திராவிட மாடல் அரசு என்ன செய்கிறது?

போக்குவரத்து தொழிலாளர்கள் பணி நிறைவு பெற்று, 10 - 12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப்பலன்களை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. அவர்களில் பலர் இறந்தும் விட்டனர்.

ஊர்வலம், போராட்டம், தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் என நடத்தியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

பாவம் அவர்கள்... ஓய்வு பெற்று விட்டனர். அதனால், அவர்களால் வேலை நிறுத்தம் செய்ய முடியவில்லை.

பணப்பலன்களை நிறுத்தி வைத்துள்ளோமே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும், அவர்களின் குடும்பமும், குழந்தைகளும் எப்படி சாப்பிடுவர், உயிர் வாழ்வர் என, தமிழக அரசு என்றைக்காவது சிந்தித்து பார்த்தது உண்டா?

கருணாநிதி சிலை வைப்பதற்கு கோடி கோடியாக பணம் உள்ளது; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை கொடுக்க நிதி இல்லையா? இதுதான் சமநீதியா?



சம்பள உயர்வு சரிதானா?


கே.மணிவண்ணன், சூலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு, எம்.பி.,க்களின் சம்பளத்தை, 24 சதவீதமாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் ரூபாயாக இருந்த மாத சம்பளம், இனி, 1 லட்சத்து, 24,000 ரூபாயாக உயரும். அத்துடன், பார்லி., நிலைக்குழு கூட்டங்களில், எம்.பி.,க்கள் பங்கேற்கும்போது வழங்கப்பட்ட தினப்படி, 2,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாக அதிகரிக்கும்!

கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி மக்கள் பணி செய்கின்றனர் அல்லவா... அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் இவர்களுக்கு மட்டும் பொருந்தும் போலும்... தற்போது வழங்கப்பட்டு வரும், 25,000 ரூபாயும், 31,000 ரூபாயாக உயருகிறது.

ஐந்து ஆண்டு கடந்த எம்.பி.,க்களுக்கு வழங்கப் பட்ட கூடுதல் ஓய்வூதியம், 2,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாகவும், மாதாந்திர தொகுதிபடி, அலுவலக செலவு தொகை என கணிசமாக உயர்த்தபட்டுள்ளன.

மேலும், இந்த எம்.பி.,க்கள் மின்சாரக் கட்டணம் கூட செலுத்த முடியாத வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதால், இவர்களுக்கு ஆண்டுக்கு, 50,000 யூனிட் இலவச மின்சாரம், 4,000 லிட்டர் இலவச குடிநீர் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

வருமான வரி எல்லாம் முதுகு தேய அலுவலகத்தில் உழைப்பவர்களுக்கும், இரவு பகலாக கண் விழித்து தொழில் செய்பவர்களுக்கும் தான்... எம்.பி.,க்கள் வாங்கும் சம்பளத்திற்கு எல்லாம் வருமானவரி இல்லை.

எண்ணற்ற மக்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, கோடிகளில் புரளும் இந்த ஏழைகளுக்கு சம்பளம் ஏற்றுவது, காலத்தின் கட்டாயம் அல்லவா... பாவம் அவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும்!



பேசும்முன் சிந்திக்க வேண்டும்!


என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்: 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், சில சினிமா பொறுக்கிகளும், தி.மு.க.,வை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்' என்று திருவாய் மலர்ந்துள்ளார், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி.

அவர், த.வெ.க., தலைவர் நடிகர் விஜயை திட்டுவது நன்றாக தெரிகிறது. ஆனால், தி.மு.க., தலைவர்களின் பழைய வரலாற்றை மறந்துவிட்டு பேசலாமா?

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர், அந்த சினிமா பொறுக்கிகளுக்கு வசனம் எழுதி கொடுத்தது மட்டுமல்ல; நாடக நடிகர்களாகவும் இருந்தவர்கள்!

கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த முரசொலி மாறன், சொர்ணம், அமிர்தம் ஆகியோரும் சினிமாவில் பணியாற்றியவர்களே! ஸ்டாலின் கூட கருணாநிதி வசனம் எழுதி, ஓடாத படங்களான, ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற படங்களிலும், 'குறிஞ்சி மலர்' என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் இன்றும் அந்த சினிமா பொறுக்கிகளை வைத்து தான், படம் தயாரித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். அவ்வளவு ஏன்... துணை முதல்வர் உதயநிதியே, அரசியல், 'என்ட்ரிக்கு' முன், சினிமாவில் தானே நடித்தார்?

இவர்களை எல்லாம் சினிமா பொறுக்கிகள் என்கிறாரா ஆர்.எஸ்.பாரதி?

தி.மு.க.,விற்கு ஜால்ரா அடிக்கும் கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோர் இதற்கு என்ன பதில் சொல்வர்?

எம்.ஜி.ஆர்., என்று ஒரு நடிகர் இல்லாவிட்டால், தி.மு.க., என்ற கட்சியே இருந்திருக்காது!

எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன், வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி என பல சினிமாக்காரர்களால் தான், தி.மு.க., வளர்ந்தது என்பதை அனைவரும் அறிவர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகர் - நடிகையரை தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பி தான், தி.மு.க.,வை வளர்த்தனர்.

கடந்த 2016 தேர்தலில் நடிகர் விஜயகாந்தை வளைத்து போட கருணாநிதி பட்டபாடும், 'பழம் நழுவி பாலில் விழுந்தது' என்று, 'டயலாக்' பேசியதையும் தமிழக மக்கள் மறந்து விடவில்லை.

உதயநிதியின் மனைவி கிருத்திகா, சினிமா பொறுக்கிகளை வைத்து இப்போதும் படம் இயக்கி கொண்டு இருக்கிறார்.

தன் வாரிசுக்கு தி.மு.க., வில் பதவி கிடைக்காததால், எதையாவது பேசி, ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறார், பாரதி.

ஆனால், அவரது வார்த்தைகளே, தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை பதம் பார்த்து விடும் போலிருக்கு!

வார்த்தைகளை வெளியிடுவதற்கு முன், ஆர்.எஸ்.பாரதி பல முறை சிந்திக்க வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap