PUBLISHED ON : ஆக 10, 2026 01:22 AM

ஆகஸ்ட் 10, 1916
வேலுார் மாவட்டம், மாம்பாக்கத்தில், சாமா சுப்பிரமணிய அய்யர் - மங்களம் அம்மாள் தம்பதியின் மகனாக, 1916ல், இதே நாளில் பிறந்தவர், சா.விஸ்வநாதன் எனும் சாவி.
சென்னை, வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தவர், 'சுதேசமித்திரன்' உள்ளிட்ட பத்திரிகைகளை படித்து, பொது அறிவை வளர்த்துக் கொண்டார். பல பத்திரிகைகளில் பணியாற்றி, 'கல்கி, ஆனந்த விகடன்' இதழ்களில் ஆசிரியராக பொறுப்பு வகித்தார்.
இவர் எழுதிய கட்டுரைகளும், 'வாஷிங்டனில் திருமணம்' தொடரும் பிரபலமாகின. 1979ல், 'சாவி' என்ற பல்சுவை வார இதழையும், பின், 'வெள்ளிமணி, பூவாளி, திசைகள், மோனா, விசிட்டர் லென்ஸ்' உள்ளிட்ட இதழ்களையும் துவக்கி, நடத்தினார்.
நண்பர்களுடன், 'ஞானபாரதி' என்ற அமைப்பைத் தொடங்கி, கலை மற்றும் இதழியல் துறை சாதனையாளர்களை கவுரவித்து விருது வழங்கினார்.
கடந்த 2001, பிப்ரவரி 9ல், இவரது 85வது வயதில் நடந்த, 'சாவி -- 85' நுால் வெளியீட்டு விழாவில் பேசி கொண்டிருந்த போது, மாரடைப்பால் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
