PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில், பல்வேறு திட்ட பணிகளை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், செய்தி சேகரிக்க பல்லடம் பகுதி நிருபர்கள், யு டியூப் சேனல் நடத்துவோர் குவிந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், வழக்கம் போல நகராட்சி வாயிலாக அனைவருக்கும், பண பட்டுவாடா நடந்தது. அப்போது, தாமதமாக வந்த யு டியூபர் ஒருவர், தன் பெயரையும் பட்டுவாடா பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கூற, அங்கிருந்தவர்கள் அதற்கு மறுக்க, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், நிருபர் ஒருவர், யு டியூபர் முகத்தில் மோதிர விரலால் ஒரு, 'பஞ்ச்' வைக்க, ரத்தம் சொட்டிய நிலையில், அந்த யு டியூபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர், 'இந்த யு டியூபர்கள் இம்சை தாங்க முடியலையே...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

