PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: நிதி நெருக்கடியால் மதுரை
காமராஜர் பல்கலை பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த
டிசம்பர், ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அங்குள்ள
பணியாளர்கள் ஒன்பது நாட்களாக போராடி வருகின்றனர். இதை தமிழக அரசு
கண்டுகொள்ளவில்லை. அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை
சமாளிக்க முடியும்.
அரசு கஜானாவை துடைத்து, 'பாலிஷ்' போட்டு வச்சிருக்காங்களே... அவங்ககிட்ட இருந்தா தானே தருவாங்க!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக, 3,200 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அப்பகுதி விவசாயிகள் ஆறு மாதங்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்து குற்றவாளிகளை போல நடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சிப்காட் விரிவாக்க திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
'திட்டத்தை கைவிடலன்னா, தேர்தலில் நாங்க கைவிட்ருவோம்'னு விவசாயிகள் சொன்னாலே எல்லாம் சரியாகிடுமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'கிராமங்கள் தோறும் நவோதயா பள்ளிகள் துவக்கப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்படாததற்கு, பயிற்று மொழியாக தமிழ் இடம் பெறவில்லை என்பது தான் காரணம். ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழிகள். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவக்கப்படும் முன், தமிழும் பயிற்று மொழியாக இடம் பெறும் என்ற உறுதியை அண்ணாமலை அளிப்பாரா?
மொழி அரசியல் நடத்துற அரசியல்வாதிகள் இருக்கிற வரைக்கும், ஹிந்தியும், ஆங்கிலமும் தெரியாம நம்ம பசங்க திருதிருன்னு முழிச்சிட்டு தான் இருக்கணும்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ராம ராஜ்ஜியம் இருந்ததா என தெரியாது. ஆனால், திராவிட மாடல் ராஜ்ஜியம் நல்லாட்சியாக உள்ளது' என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். உண்மை தான். ஊழல் மாடல் ராஜ்ஜியத்தில் உள்ளவர்களுக்கு, நேர்மை ராஜ்ஜியம் இருந்ததா என தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை தான்.
என்ன மாடலா இருந்தாலும், நல்லாட்சின்னு மக்கள் தானே சொல்லணும்... ஆட்சி நடத்துறவங்களே சொல்லிக்கிட்டா எப்படி?

