PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
அ.தி.மு.க., பொதுச்செயலர்
பழனிசாமி பற்றி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி
கிண்டலாக பேசியுள்ளார். கட்சி தலைவர்கள் குறித்து நையாண்டி பேசுவது அழகு
அல்ல. ஸ்டாலின் மகன் என்ற ஒற்றை தகுதி தவிர வேறு என்ன உள்ளது. உங்களை
காட்டிலும் எங்களுக்கும் நையாண்டியாக, அருவருப்பாக பேச முடியும். உங்கள்
நையாண்டி பேச்சுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
வெறும்
கண்டனத்துடன் முடிச்சுக்கிட்டா ஆச்சா...? உதயநிதியை கண்டித்து, மதுரையில்
மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டியிருக்க வேண்டாமா?
ம.தி.மு.க.,வில் இருந்து நீக்க ப்பட்டுள்ள மல்லை சத்யா பேட்டி:
என்னை கட்சியில் இருந்து நீக்க, செப்., 8ம் தேதியை தேர்வு செய்துள்ளனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து வந்திருக்கிறார். என்னை, 7ம் தேதியே நீக்கியிருக்கலாம். முதல்வர் ஸ்டாலின் சாதனையை ரசிக்காத ம.தி.மு.க., தலைமை, அதை திசை திருப்பும் வகையில், என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த மாதிரி, 'சிண்டு முடியும்' வேலைக்கு எல்லாம் தி.மு.க., தலைமை அசராது... வைகோவி ன் கூட்டணி விசுவாசம் பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியும்!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
மத்திய பா.ஜ., ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை. மக்கள் மீது நன்மதிப்பு இல்லை. தேசம் முன்னேறுவதற்கு நேரு முதல் சோனியா வரை கொண்டு வந்த திட்டங்கள் பின்னடைவை நோக்கி செல்கின்றன. உலக நாடுகள் முன், இந்தியாவை இந்திரா தலை நிமிர வைத்தார். இன்று இந்தியாவை தலைகுனிய வைத்திருக்கின்றனர்.
காங்., ஆட்சியில், காஷ்மீர் விவகாரத்தை சிக்கலாக்கியது , எமர்ஜென்சி, சீக்கியருக்கு எதிரான கலவரம், கட்டுக்கடங்காத ஊழல்கள் எல்லாம் இந்தியாவை தலைநிமிர வைத்ததா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது நல்லது. தொண்டர்கள் விழித்து கொள்ளவில்லை எனில், மீண்டும் ஆட்சிக்கு வருவது சிரமம்தான். நாங்கள் சேரும் கூட்டணி உறுதியாக ஆட்சி அமைக்கும். எங்களின் முதல் விருப்பம், தே.ஜ., கூட்டணி தான். தி.மு.க., மற்றும் சீமானுடன் செல்ல மாட்டோம். விஜய் உள்ளிட்ட யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
தே.ஜ., - தி.மு.க., மற்றும் சீமானை கழித்து விட்டால், எஞ்சியிருப்பது விஜய் தான்... 'ஆட்சியில் பங்கு' என, அவர் துாண்டில் போட்டிருப்பதால், அங்கு நடையை கட்டலாம்னு நினைக்கிறாரோ?