UPDATED : மார் 25, 2025 08:30 AM
ADDED : மார் 25, 2025 07:35 AM

'எலைட்' டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் 'எலைட்' டாஸ்மாக் கடை முதல் தளத்தில் இயங்கி வருகிறது. போதுமான இடவசதி இல்லாததால், இக்கடைக்கு வரும் வாடிக்கையார்கள் படிகளிலும், சாலையிலும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
மேலும், காஞ்சியில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், இந்த 'எலைட்' கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களால் ரயில்வே சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ரயில்வே சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இயங்கும், 'எலைட்' டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ரஜினிகாந்த், காஞ்சிபுரம்.
சேதமான மின் கம்பத்தால் புத்தேரியில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின் கம்பங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதி லமடைந்து உள்ளது. பலத்த காற்று வீசினாலோ, இவ்வழியாக செல்லும் கனரக வாகனம் லேசாக உரசினாலோ, மின் கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என். ஜெயராமன், காஞ்சிபுரம்.
உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கீழ்கதிர்பூரில் இருந்து மேல்கதிர்பூர் செல்வோர் கீழம்பி புறவழி சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. நான்கு முனை சாலை சந்திப்பான இப்பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், இரவு நேரத்தில் கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூரில் இருந்து, கீழம்பி புறவழிச்சாலையை கடக்கும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர் செல்லும் சாலை இணையும் இடமான, நான்குவழிச் சாலை சந்திப்பில் விபத்தை தவிர்க்க உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
- கே.மேகநாதன், கீழ்கதிர்பூர்.
நாய் தொல்லையை தடுக்க நடவடிக்கை வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைக்கு உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அப்பகுதியினர் செல்லும்போது, தெரு நாய்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து, நாய்கள் பொதுமக்களை கடித்தும் வருகின்றன. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளும் அச்சத்துடன் சென்றுவருகின்றனர். எனவே, பொது மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும்நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.எஸ்.அறிவழகன், திருப்புலிவனம்.