PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

ஜனவரி 23, 1967
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடியில், 1890, மே 19ல், திருவேங்கடம் அய்யங்கார் - செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், ராமானுஜ அய்யங்கார்.
இவரது தந்தை, இவர் ஜாதகத்தை பார்த்து, சங்கீதத்தில் புகழ்பெற வாய்ப்புள்ளதைக் கணித்து, புதுக்கோட்டை மலையப்ப அய்யர், நாமக்கல் நரசிம்ம அய்யங்கார் உள்ளிட்டோரிடம் சங்கீதம் கற்க அனுப்பினார். இவர் தன், 16வது வயதில், ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் கச்சேரியை கேட்டு மயங்கி, அவரிடம் சிஷ்யனாக சேர்ந்தார்.
காரைக்குடி சகோதரர்களிடம் வீணை இசைக்கவும் கற்றார். வீணை தனம்மாள் பாணியில், பாடல்களையும் இயற்றி பாடினார். வர்ணம், பாடல்கள், சிறுராக ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் எனும் புதிய பாட்டு பாணியை அறிமுகம் செய்தார்.
தன் கச்சேரிகளில், திருப்புகழ், ஆண்டாள் திருப்பாவை, அருணாச்சல கவிராயர் பாடல்களை கட்டாயம் இடம்பெற செய்தார். 'பத்மபூஷன்'உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர், 1967ல், தன் 77வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
தன் ஊர் பெயரை, இசையால் உலகறிய செய்த, 'அரியக்குடியார்' மறைந்த தினம் இன்று!

