Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

2


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026

2


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தங்கியிருந்த போது, சிறிது உடல்நலம் குன்றியிருந்தார். அவரை அடிக்கடி பார்க்க வருவோர், நீண்ட நேரம் பேசி தொல்லை கொடுக்காமலிருக்க, அண்ணாதுரையின் நெருங்கிய நண்பர்கள் தடை போட விரும்பினர். யாராவது அவரைப் பார்க்க வந்தால், அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி; அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

அதே பதில், ஒரு நாளிதழ் நிருபருக்கும் கிடைத்தது. 'அண்ணாதுரைக்கு காய்ச்சல்; அதனால், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை!' என்று அவர் தடுக்கப்பட்டதும், அச்செய்திக்கு பெரிய அளவில் பத்திரிகையில் முதலிடம் தந்து விட்டார், அவர். அன்று மாலை வெளியான அந்த நாளிதழில், 'அண்ணாதுரைக்கு கடுமையான காய்ச்சல்!' என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் செய்தி வெளி வந்துவிட்டது.

அந்த செய்தியை, அண்ணாதுரையும் பார்த்தார். சிறிது திகைப்போடு, பக்கத்திலிருந்த, நண்பர், என்.வி.நடராசனிடம், 'எனக்கு கடுமையான காய்ச்சல் என்று பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருக்கின்றனரே... எனக்கு அப்படியொன்றும் காய்ச்சல் கடுமையாக இல்லையே... இப்படி செய்தி வெளிவர காரணம் என்ன?' என்று கேட்டார்.

நடந்ததை சொன்னார், என்.வி.நடராசன். உடனே, எழுந்து, காரைக் கொண்டு வர சொல்லி, 'நாம் சென்னை நகரில் முக்கியமான பகுதிகளில் சுற்றி வர வேண்டும். எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை; நலமாகத்தான் இருக்கிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

'இல்லையென்றால், இந்தப் பத்திரிகை செய்தியை பார்த்துவிட்டு ஏராளமான பேர் எனக்கு உடம்புக்கு என்னவோ ஏதோ என்று கவலையோடு, கேட்க கூடி விடுவர்...' என்றார், அண்ணாதுரை.

அவரின் விருப்பப்படி, காரின், 'டாப்' கழற்றப்பட்டது. திருமண மாப்பிள்ளை ஊர்வலம் வருவது போல, திறந்த காரில் தன் நண்பர்கள் சிலருடன் சென்னையின் முக்கியத் தெருக்களின் வழியாக பவனி வந்தார், அண்ணாதுரை. பலரைக் கைகூப்பி வணங்கினார். சிறிது நேரம் கடற்கரை மணலில் பலர் பார்க்கும்படி உட்கார்ந்து இருந்தார்.

அவரைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். வேறு சிலர் வியப்போடு, 'அண்ணாதுரைக்கு கடுமையான காய்ச்சல் என்று பத்திரிகைகளில் போட்டிருந்தனரே... இதோ, அண்ணாதுரை கடற்கரையில் உட்கார்ந்து இருக்கிறாரே...' என பேசிக் கொண்டு சென்றனர். அப்படிப் பேச வேண்டுமென்பது தான், அண்ணாதுரையின் விருப்பம்.

********

எழுத்தாளரும், திரைப்பட கதை, வசனகர்த்தாவுமான, கொத்தமங்கலம் சுப்பு, ஒரு கட்டுரையில் எழுதியது: பி ரபல திரைப்பட தயாரிப்பாளரான, எஸ்.எஸ்.வாசன், மங்கம்மா சபதம் என்ற படத்தை எடுக்க விரும்பினார்.

இரவு பகலாக கதையைப் பற்றி விவாதித்தோம். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவனது மனம் மகிழ்ந்து போகும் அளவுக்கு படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம், வாசனுக்கு வந்து விட்டது. தமிழகம் அன்று வரை காணாத அளவில் பிரமாண்டமான காட்சி ஜோடனைகள், மங்கம்மா சபதம் படத்துக்கென போட்டு படமாக்கப்பட்டன.

மங்கம்மா, தன் மகன் கையில் சவுக்கை கொடுத்து, கணவனை அடிக்கும் கட்டம். இதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்தது.

'ஒரு ஹிந்து குடும்ப பெண், தன் எதிரில் கணவன் அடிபடுவதை பார்த்து சகிக்க மாட்டாள். அதுவும், தன் மகன் அடிப்பதை அறவே விரும்ப மாட்டாள். அடிக்க சொல்லியும் கூற மாட்டாள். நம் பெண் குலத்தின் பெருமைக்கும், பண்புக்கும் இது பெரிய மாசு கற்பித்து விடும். இந்தக் காட்சியை நான் அனுமதிக்க மாட்டேன்...' என சொல்லி விட்டார், வாசன்.

' மங்கம்மா சபதம் படத்தின் ஜீவ நாடியே இது தான். தன் சபதத்தை நிறைவேற்றாவிட்டால், மங்கம்மா தோல்வி அடைந்து விட்டாள் என்று தானே அர்த்தம்?' என்றெல்லாம் பலவாறு எடுத்து சொன்னோம்.

'ஒரு படத்திற்கு ஜீவநாடி மக்கள் ஆதரவு தான். தன் பிள்ளையைக் கொண்டு, ஒரு தாய் தன் கணவனை அடிக்கச் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அது, தவறான கருத்து; பண்பாட்டுக்கு ஒவ்வாதது...' என்று பிடிவாதத்துடன் சொல்லி விட்டார், வாசன்.

கடைசியில் மங்கம்மா தன் வெற்றியையே, தோல்வியாக கருதுவதாகச் சொல்லி வசனம் எழுதினோம். ஒரு ஹிந்து குடும்ப பெண் தான் செய்த காரியத்துக்காக மனதார வருத்தப்படுவதை போல் காட்சியை மாற்றி அமைத்தோம்.

படம் வெளிவந்ததும் இந்தக் கருத்து பெரிதும் பாரட்டப்பட்டது; வாசனின் வாதமும் படத்துக்கு வெற்றியை பெற்று தந்தது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap