PUBLISHED ON : ஜூன் 24, 2026

நாட்டு ரக பீட்ரூட் கொய்யா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த ஓய்வு பெற்ற முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரக்கன்றுகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், வயலில் நாட்டு ரக பீட்ரூட் கொய்யா நடவு செய்துள்ளேன்.
ஒட்டு கட்டிய மரக்கன்றுகளாக சாகுபடி செய்யும் போது, மூன்று ஆண்டுகளில் மகசூல் கொடுக்க தொடங்கி விடும். இந்த கொய்யா செடிகளுக்கு, காற்றோட்டமான நல்ல இடைவெளி மற்றும் மழைநீர் எளிதாக வடிந்து செல்லும் அளவிற்கு, வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அப்போது தான் கொய்யா மரத்தில் காய் பிடிப்பு நன்றாக இருக்கும். குறிப்பாக, நாட்டு ரக பீட்ரூட் கொய்யாவை பொருத்தவரையில், நன்றாக விளைச்சல் தரும் விளை நிலத்தில், சாகுபடி செய்தால், கூடுதல் மகசூல் ஈட்டுவதோடு, காய்கள் திரட்சியாக வளரும் இருக்கும்.
இந்த நாட்டு ரக கொய்யா பழத்தின் இனிப்பு, நாட்டு பாதாம் பழத்தின் சுவை போல் இருக்கும். இனிப்பு குறைவாக இருந்தாலும், நீரிழிவு நோய்களுக்கு உகந்தது என்றால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -பி.கிருஷ்ணன்,
93846 67714.
