UPDATED : மார் 19, 2026 05:38 AM
ADDED : மார் 19, 2026 05:36 AM

பெங்களூரின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஹலசூரு ஏரிக்கு, புதுப்பொலிவு கொடுப்பதால், சுற்றுலா பயணியர் குஷி அடைந்துள்ளனர். விரைவில் இந்த ஏரியில், படகு சவாரி செய்யலாம்.
ஹலசூரு ஏரி,
பெங்களூரின் வரலாற்று பிரசித்தி பெற்ற முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும். 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடா, மக்களின் குடிநீர் தேவைக்காக, 1537ல் ஹலசூரு ஏரியை அமைத்தார். அந்த காலத்தில் விவசாயத்துக்கும், மக்களின் குடிநீருக்கும் ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் தண்ணீர் அசுத்தமடைந்ததால், குடிநீராக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.
காதல் ஜோடி
பெங்களூரின் எம்.ஜி.சாலையில் உள்ள, ஹலசூரு ஏரிக்கரையில் தினமும் காலை, மாலையில் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள் நடைபயிற்சி செய்கின்றனர். வார இறுதி நாட்களில் நண்பர்கள், குடும்பத்துடன் இங்கு வந்து பொழுது போக்குவது வழக்கம். குறிப்பாக இங்கு காதல் ஜோடிகளை ஏராளமாக காணலாம். அமைதியான சூழ்நிலையில் இயற்கையை ரசிக்கலாம்.
ஹலசூரு, பெ ங்களூரின் மிகவும் பழமையான பகுதிகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இங்கு பலாப்பழங்கள் விளைந்தன. பலாப்பழ தோட்டங்கள் இருந்தன. கன்னட மொழியில், ' ஹலசூ ' என்றால் பலாப்பழம் என, அர்த்தமாகும். பலாப்பழ ஊர் என்ற பெயர், காலப்போக்கில் ஹலசூரு என, மாறியதாம். தோட்டங்கள் இருந்த இடம், தற்போது குடியிருப்புகளாக மாறியுள்ளன.
எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, கமர்ஷியல் தெரு, சிவாஜிநகர் உட்பட பெங்களூரின் முக்கியமான வர்த்தக பகுதிகள், ஹலசூரு ஏரியின் 3 கி.மீ., சுற்றளவில் உள்ளன. பெங்களூருக்கு வரும் சுற்றுலா பயணியர், இந்த ஏரியை பார்க்க மறப்பதில்லை. கரையில் அமைத்துள்ள ரோஜா தோட்டம், ஏரியின் அழகை மேலும் அழகாக்குகிறது. வண்ண மயமாக பூத்து குலுங்கும் ரோஜாக்களுக்கு நடுவில் நின்று, வீடியோ, செல்பி எடுப்போர் எண்ணிக்கை அதிகம்.
4 கோடி ரூபாய்
ஏரியை மேலும் அழகாக்கி, சுற்றுலா தலமாக்கும் பணிகள் நடக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின், ஏரி நீரை முழுதாக காலியாக்கி, சீரமைக்கப்படுகிறது. இதற்காக 4 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. புதிதாக வாக்கிங் டிராக், நீருற்று அமைப்பது உட்பட, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. வரும் நாட்களில் படகு சவாரி செய்து மகிழலாம். வரலாற்று பிரசித்தி பெற்ற ஹலசூரு ஏரி சீரமைப்பதால், சுற்றுப்பகுதி மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
