ADDED : மே 03, 2025 11:06 PM
பெலகாவி:பெலகாவி மாவட்டம், இக்கோடி தாலுகாவின், இங்கலி கிராமத்தில் வசிப்பவர்கள் பிரதமேஷ் கெரபா, 13, அதர்வா சவுந்தலகி, 15, சமர்த் சவுகலே, 13. இவர்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தனர். நண்பர்கள்.
பள்ளி விடுமுறை என்பதால், நேற்று காலை தங்களின் நண்பர்களுடன் நீச்சலடித்து விளையாட, கிராமத்தின் விவசாய குளத்துக்குச் சென்றனர். சமீப நாட்களாக மழை பெய்ததால், குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தது.
சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றதால், வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விளையாடச் சென்ற சிறுவர்கள், நீண்ட நேரமாக வீடு திரும்பாததால். அச்சமடைந்த பெற்றோர் தேட துவங்கினர். எங்கும் தென்படாததால் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர். அப்போது விவசாய குளத்தில், மூன்று சிறுவர்களின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டனர்.
