ADDED : ஜன 21, 2024 10:44 AM
புதுடில்லி: நாட்டின் கோதுமை விதைப்பு, 2023 - 24 ராபி பருவத்தில் 3.40 கோடி ஹெக்டேருக்கு மேலாக அதிகரித்துள்ளது என்றும், இருப்பினும், பருப்பு வகைகளின் விதைப்பு பரப்பளவு குறைந்துள்ளது என்றும் விவசாய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ராபி பருவ பயிர்களில் முக்கியமான பயிராக உள்ள கோதுமையின் விதைப்பு, கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி தற்போது நிறைவு அடைந்துள்ளது.
கோதுமை பயிர் அதிகளவில் விதைக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டு அதன் உற்பத்தி நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான கோதுமை பயிர் விதைக்கப்பட்ட பகுதியில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. அதேசமயம், பருப்பு விதைப்பு அளவு குறைந்துள்ளது.
கடந்த ராபி பருவத்தில், பருப்பு விதைப்பு, 1.62 கோடி ஹெக்டேராக இருந்தது. இது தற்போது, 1.55 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.
இதுகுறித்து, இத்துறை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
தற்போதைய குளிர் காலநிலை, கோதுமை மற்றும் பிற ராபி பயிர்களின் வளர்ச்சிக்கு நல்லது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள மொத்த கோதுமை பரப்பில், 70 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன.
விதைப்பு முடிந்ததும், கோதுமை பயிரை கவனித்துக்கொள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்கான ஆலோசனைகளை அமைச்சகம் வழங்கத் துவங்கியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2023-24ல் விதைத்தல்
பயிர் விதைப்பு அளவு(ஹெக்டேரில்) (ஆண்டு வளர்ச்சி(சதவீதத்தில்)
கோதுமை 3.4 கோடி 0.74 ஏற்றம்
அரிசி 28.2 லட்சம் --3.75 சரிவு
பருப்பு 1.29 கோடி -6.20 சரிவு
மசூர் பருப்பு 19.5 லட்சம் 5.98 ஏற்றம்
தானியங்கள் 51.3 லட்சம் -4.65 சரிவு
கடுகு 1.01 கோடி 2.35 ஏற்றம்
மொத்தம் 6.87 கோடி -0.28 சரிவு
(ஆதாரம் இந்திய அரசு தரவுகள்)

