பயங்கரவாத அமைப்பின் 'எக்ஸ்' கணக்கு நிர்வகித்தவருக்கு 10 ஆண்டு சிறை
பயங்கரவாத அமைப்பின் 'எக்ஸ்' கணக்கு நிர்வகித்தவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : பிப் 01, 2024 11:14 PM
பெங்களூரு: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், 'எக்ஸ்' கணக்கை நிர்வகித்த மெஹதி மஸ்துார் பிஸ்வாசுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மெஹதி பஸ்துார் பிஸ்வாஸ், 24. பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடி, பெங்களூரு வந்தார்.
ஜாலஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த இவர், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இவர், தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்.
இந்த அமைப்பின் எக்ஸ் எனும் வலைதளப் பதிவின் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீன் உட்பட பல இடங்களில் சூழ்நிலையை ஏற்றபடி, 'டுவிட்' செய்து வந்தார். சமூக வலைதளம் வழியாக, இளைஞர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஈர்க்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக, தகவலறிந்த பெங்களூரு போலீசார், 2014ல் மெஹதி மஸ்துார் பிஸ்வாசை கைது செய்தனர்.
அதன் பின் இவரிடம், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரது பயங்கரவாத செய்கை குறித்து, ஆதாரங்கள், சாட்சிகளை சேகரித்தனர்.
விசாரணையை முடித்து, பெங்களூரின் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தனர்.
விசாரணையில் மெஹதியின் குற்றம் உறுதியானதால், இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.

