8 இந்திரா உணவகங்கள் மூடல் பல்லாரி பொதுமக்கள் அதிருப்தி
8 இந்திரா உணவகங்கள் மூடல் பல்லாரி பொதுமக்கள் அதிருப்தி
ADDED : பிப் 01, 2024 11:05 PM
பல்லாரி: நிதி நெருக்கடி காரணமாக, பல்லாரியில் எட்டு இந்திரா உணவகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் அரசு மீது, பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2013 - 2018ல் சித்தராமையா முதல்வராக இருந்த போது, ஏழை மக்கள் குறைந்த விலையில், தரமான உணவு சாப்பிடுவதற்காக, மாநிலம் முழுதும் இந்திரா உணவகங்கள் திறக்கப்பட்டன. காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், இரவு உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது.
இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உணவகங்களை ஒப்பந்தம் எடுத்து, தனியார் நடத்தி வந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்திரா உணவகங்கள் கடும் நிதி நெருக்கடியில், சிக்கி தவிக்கின்றன.இந்நிலையில் பல்லாரி மாவட்டத்தில், பல்லாரி டவுனில் விம்ஸ் மருத்துவமனை வளாகம், பெலேகல்லு கிராஸ், ஏ.பி.எம்.சி., மார்க்கெட், புடா அலுவலக வளாகம், மோதி விருத்தா ஆகிய ஐந்து இடங்களிலும், சிருகுப்பா, கூட்லகி, சண்டூரில் தலா ஒரு இடங்களிலும், இந்திரா உணவகங்கள் திடீரென மூடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திரா உணவகங்களுக்கு, அரசு நிதி ஒதுக்கவில்லை.
'இதனால் எங்கள் பணத்தை செலவு செய்து, உணவு தயாரித்து, மக்களுக்கு வழங்கி வந்தோம். உணவகங்களை பராமரிக்கவே மாதம் லட்சக்கணக்கில் செலவு ஆகிறது.
'காங்கிரஸ் அரசு வந்த பின்னரும், நிதி ஒதுக்கப்படவில்லை. பல்லாரியில் தற்போது மூடப்பட்டு உள்ள எட்டு உணவகங்களுக்கும் அரசிடம் இருந்து 4.50 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. காய்கறிகள் வாங்குவது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என எதுவும் செய்ய முடியவில்லை. பணம் இல்லாமல் நடத்தி நாங்கள் தான் நஷ்டத்தை சந்திக்கிறோம். இதனால் உணவகங்கள் மூடப்பட்டன' என்றனர்.
இந்திரா உணவகங்கள் மூடப்பட்டதால், அரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தை, வெளிப்படுத்தி உள்ளனர்.
'முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டமான, இந்திரா உணவகங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத, மோசமான நிலைக்கு அரசு சென்றுவிட்டது.
'வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி, ஏழை, எளிய மக்களின் வயிற்றை நிரப்பும் இந்திரா உணவகங்களுக்கு, மூடுவிழா நடத்த பார்க்கின்றனர்' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

