முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : ஜன 21, 2024 01:14 AM
பெங்களூரு : ''அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சில விஷமிகள் போலி செய்திகளை பரப்பி, அப்பாவி மக்களை துாண்டிவிடுவது ஏற்கனவே கவனிக்கப்பட்டது.
இதுபோன்ற செய்திகளை கேட்டவுடன், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.
'கர்நாடகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு காங்கிரஸ் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகிறார்.
இந்த அறிக்கையில் அமைதியை நிலைநாட்டும் நம்பிக்கையை விட, அச்சுறுத்தல், ஆத்திரமூட்டல் தொனி தெரிகிறது. அரசு தனது கடமையை உணர்ந்து உள்ளது. தவறு நடந்தால் சட்டம், தன் கடமையை செய்யும்.
ஏற்கனவே சில பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆத்திரமூட்டும் வகையில் அறிக்கை விடுவதை மாநில அரசு கவனித்து உள்ளது.
இத்தகையவர்கள் மீது மாநில பா.ஜ., தலைவர் கடும் நடவடிக்கை எடுத்தால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அரசின் பணி எளிதாகும்.
கடவுள் - மதம் - வழிபாடு என அனைத்தும் தனிப்பட்டவை. இதை தனிதனித அளவில் பின்பற்றினால், கடவுள் - தர்மம் அனைவருக்கும் மரியாதையும், சமுதாயம் நலமும் பெறும். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளார்.

