பஸ்சில் பாய்ந்து ஒருவர் தற்கொலை
விஜயபுரா திப்பு சுல்தான் சதுக்கத்தில் நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையோரம் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென பஸ் முன் பாய்ந்தார். அவர் மீது பின்பக்க டயர் ஏறி, இறங்கியது. அவர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஹாசன் அரிசிகெரேயை சேர்ந்த விஸ்வநாத் சங்கரய்யா, 38, என்பது தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
சிக்கபல்லாப்பூர் பைச்சாபுரா சாலையில் நேற்று காலை ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மீது கவிழ்ந்தது. டிரைவர் காயம் அடைந்தார்.
விபத்தில் 6 பேர் படுகாயம்
ராம்நகர் ஜெயபுரா கேட் அருகே நேற்று காலை எதிர் எதிரே வந்த ஜீப், கார் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
கல்லுாரி மாணவி தற்கொலை
பெங்களூரு தொட்டபல்லாப்பூர் தியாகராஜநகரில் வசித்தவர் ஜான்சி, 17. தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை.

