லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு நெருக்கடி!: தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் விலகல்
லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு நெருக்கடி!: தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் விலகல்
ADDED : ஜன 13, 2024 11:47 PM

புதுடில்லி: கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், காங்., வெற்றிக்கு வித்திட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு, வரும் லோக்சபா தேர்தலில், அக்கட்சிக்கு ஆலோசனைகளை வழங்க மாட்டார் என, தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சு, அவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் தான், கடந்த கால தேர்தல்களில் ஓட்டுகளை அறுவடை செய்யும் கருவிகளாக இருந்தன.
தற்போது மக்களின் மனப் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
வலியுறுத்தல்
இதுபோன்ற வியூகங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளுக்கு முடியாத காரியமாக உள்ளது.
இதனால், பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகோலு போன்ற தேர்தல் வியூக வகுப்பாளர்களை பல கோடி ரூபாய் கொடுத்து, தங்களுக்கு தேர்தல் பணியாற்றும்படி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதில் அரசியல் கட்சிகளால் மிகவும் விரும்பப்படுபவர், பிரசாந்த் கிஷோர். இவர், பா.ஜ., - தி.மு.க., - ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து, வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.
இவரிடம் உதவியாள ராக பணியாற்றியவர் தான், சுனில் கனுகோலு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பிரிந்த அவர், தற்போது தனியாக தேர்தல் வியூக நிறுவனம் அமைத்துள்ளார்.
பிரசாந்த் கிஷோருக்கு அடுத்தபடியாக இவருக்குத் தான், தற்போது அரசியல் கட்சிகளிடம் கிராக்கி நிலவுகிறது.
கர்நாடகா, தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த காங்., ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு மூளையாக செயல்பட்டவர், சுனில் கனுகோலு.
எதிர்பார்ப்பு
இவர் வகுத்து தந்த திட்டங்களை பின்பற்றியதாலேயே, அம்மாநிலங்களில் காங்., அமோக வெற்றி பெற்றது.
கர்நாடகாவில், கேபினட் அந்தஸ்துடன், முதல்வர் சித்தராமையாவின் முதன்மை ஆலோசகராக, சுனில் கனுகோலு உள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ராஜஸ்தான், ம.பி., தேர்தல்களில், இவரது ஆலோசனைகளை, மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோர் கேட்காததாலேயே அங்கு காங்., மண்ணை கவ்வியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காங்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், தேர்தல் திட்ட வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம் பெற்றிருந்தார்.
இவர், லோக்சபா தேர்தலில், காங்., வெற்றிக்கு திட்டங்களை வகுத்து தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், காங்கிரசுக்கு சுனில் கனுகோலு ஆலோசனைகளை வழங்க மாட்டார் என, தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஹரியானா, மஹாராஷ்டிராவில் காங்கிரசுக்கு திட்டங்களை வகுத்து தருவார் என, கூறப்படுகிறது.
கடந்த 2022ல், காங்கிரசில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விலகிய நிலையில், தற்போது சுனில் கனுகோலுவும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியிருப்பது, அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

