UPDATED : அக் 06, 2025 04:38 PM
ADDED : அக் 06, 2025 10:16 AM

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக நவ.,6 மற்றும் 11 தேதிகளில் நடத்தப்படும் எனவும், ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடக்கும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் பீஹார் சென்று அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் இன்று டில்லியில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பீஹார் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அவர் கூறியதாவது:பீஹார் தேர்தலில் வன்முறையை அனுமதிக்க முடியாது. வெளிப்படையான முறையில் நேர்மையாக தேர்தல் நடத்தப்படும். பூத் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஓட்டுச்சாவடிக்கு 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்கள் பூத் அமைக்கப்படும். தேர்தல் கமிஷனால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற ஒரு செயலி அறிமுகபடுத்தப்படும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சட்டசபைக்கு 2 கட்டங்களாக நவ.,6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும்
ஓட்டு எண்ணிக்கை நவ.,14ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

