ADDED : ஜன 13, 2024 11:22 PM
பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த வழக்கில், மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் உட்பட ஐந்து பேருக்கு, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
டில்லியில் உள்ள பார்லிமென்டில் எம்.பி.,க்கள் அமரும் இருக்கை பகுதியில், கடந்த மாதம் 13ம் தேதி, இருவர் அத்துமீறி நுழைந்தனர்.
வண்ண புகைகளை பரவவிட்டனர். இதுபோன்று பார்லிமென்டிற்கு வெளியே ஒரு பெண் உட்பட இருவர், வண்ண புகை பரவவிட்டனர்.
இவர்கள் நான்கு பேரையும் டில்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரும் கைது செய்யப்ப்டனர்.
விசாரணையில் அவர்கள் மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே, லலித் ஜா, நீலம், மகேஷ் குமாவத் என்பது தெரிந்தது. இவர்களில் மனோரஞ்சன் மைசூரை சேர்ந்தவர் ஆவார். கைதானவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்நிலையில் பார்லிமென்டில் புகுந்து, வண்ண புகைகளை பரவ விட்டதற்கான, உண்மையை காரணத்தை அறிய, நீலத்தை தவிர, மற்ற ஐந்து பேருக்கும், உண்மை கண்டறியும் சோதனை நடத்த, டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, குஜராத் காந்திநகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நேற்று முன்தினம், மனோரஞ்சன் உட்பட ஐந்து பேருக்கும், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது
- நமது நிருபர் -.

