நேதாஜியை மறந்த தங்கவயல் நகராட்சி சங்கத்தினர் மட்டுமே மாலை அணிவிப்பு
நேதாஜியை மறந்த தங்கவயல் நகராட்சி சங்கத்தினர் மட்டுமே மாலை அணிவிப்பு
ADDED : ஜன 24, 2024 05:54 AM

தங்கவயல் : கர்நாடகாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு முதல் சிலை வைத்த தங்கவயலில், அவரின் பிறந்த நாள் விழாவை நேற்று, நேதாஜி சேவா சங்கத்தினர் கொண்டாடினர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு கர்நாடகாவில் முதல் சிலை, தங்கவயலில் நகராட்சி அருகில், நேதாஜி சேவா சங்கத்தினர் நிறுவினர். இச்சிலை உள்ள பூங்காவுக்கு 'நேதாஜி சிறுவர் பூங்கா' என பெயரிடப்பட்டுள்ளது.
சங்க தலைவராக இருந்த தேவராஜ் மறைவுக்கு பின், சங்க பொதுச் செயலர் அனந்த கிருஷ்ணன், துணைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆண்டுதோறும் நேதாஜி பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நாட்களில் நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் முயற்சியில் 2000 ஆகஸ்ட் 18ல் கோரமண்டல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல் மாரிகுப்பம் ராஜர்ஸ் கேம்ப் வரையிலான பி.எம்., சாலைக்கு 'நேதாஜி சாலை' என பெயரிடப்பட்டது.
இதற்காக நகராட்சி ஸ்கூல் ஆப் மைன்ஸ், அசோகா நகர், காந்தி சதுக்கம், ஆண்டர்சன் பேட்டை, ராஜர்ஸ் கேம்ப் ஆகிய இடங்களில் கரும் சலவை கற்களால் கன்னடம், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளில் கல்வெட்டு அமைத்தனர்.
இப்போது அந்த கல்வெட்டு, அசோகா நகர் பகுதியில் மட்டுமே உள்ளது. மற்றவை இருந்த இடம் தெரியவில்லை. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நேதாஜி சிறுவர் பூங்காவில் பெயர் பலகை அழிந்து பல ஆண்டுகள் ஆகின்றன. பல முறை தெரியபடுத்தியும், நகராட்சி கவனம் செலுத்தவே இல்லை.
'நேதாஜி'யை அலட்சியம் செய்வதாகவே தெரிகிறது. இச்சிலைக்கு இதுவரை நகராட்சி சார்பில் உரிய மதிப்பளித்ததே இல்லை.
நேதாஜியின் சுதந்திர போராட்ட தியாகம், தேசபக்தி தெரியவில்லையோ என நேதாஜியின் விசுவாசிகள் வருந்துகின்றனர்.
இருந்தாலும், அவரின் பிறந்த நாள் விழாவை நேற்று நேதாஜி சேவா சங்கத்தினர் கொண்டாடினர். ராபர்ட்சன்பேட்டை நகராட்சி எதிரில் உள்ள அவரது சிலைக்கு சங்கத்தினர் மாலை அணிவித்தனர். பலருக்கு இனிப்பு வழங்கினர். அவர் தியாகங்களை நினைவுகூர்ந்தனர்.

