பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் துாதருக்கு கண்டனம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் துாதருக்கு கண்டனம்
ADDED : ஜன 14, 2024 12:25 AM

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பிரிட்டன் துாதர் சென்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சகம், 'ஒட்டுமொத்த ஜம்மு - -காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்' என தெரிவித்துஉள்ளது.
புகைப்படம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கான, ஐரோப்பிய நாடான பிரிட்டன் துாதர், ஜெனி மெரியட் கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மீர்பூருக்கு சென்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், 'பிரிட்டன் - பாகிஸ்தான் மக்களிடையேயான இதயமே மீர்பூர் தான்.
'பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்களில் 70 சதவீதம் பேர் மீர்பூருடன் தொடர்புடையவர்கள். புலம்பெயர்ந்தோர் நலன்களுக்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியமானது. உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி' என தெரிவித்திருந்தார்.
ஏற்க முடியாது
இந்நிலையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஜெனி மெரியட் சென்றதற்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பாகிஸ்தானுக்கான பிரிட்டன் துாதர் ஜெனி மெரியட் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரின் பயணம், இந்திய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயலாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

