ADDED : ஜன 21, 2024 12:18 AM

தார்வாட் : நாளை தங்கள் வீடுகளில் ராம பக்தர்கள் அகல் விளக்குகள் ஏற்றுவதற்காக, மாட்டு சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஹுப்பள்ளி கோ சேவா கேந்திரா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் சேவகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. கோவில் திறப்பு விழாவை, தீபாவளி பண்டிகையாக கொண்டாடவும், அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றவும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்காக ஹுப்பள்ளியில் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றும் வகையில், அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஹுப்பள்ளியில் கோ சேவா கேந்திரா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து சாணத்தில் அகல் விளக்குகள் தயாரித்து வருகின்றன.
இங்குள்ள ஆனந்த நகரில் கடந்த இரண்டு வாரங்களாக மாட்டு சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 400க்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாளைக்குள் 10,000க்கும் மேற்பட்ட அகல் விளக்கு தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ஐந்து அகல் விளக்குகளை, 25 ரூபாய்க்கு வழங்குவதுடன், மந்திராட்சதையையும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.
சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் கோ சேவா கேந்திரா உறுப்பினர்கள். இடம்: ஹுப்பள்ளி, தார்வாட்.

