முனிசாமி எம்.பி.,க்கு எதிராக அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம்
முனிசாமி எம்.பி.,க்கு எதிராக அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம்
ADDED : ஜன 19, 2024 12:32 AM
கோலார் : கோலார் பா.ஜ.,- எம்.பி., முனிசாமிக்கு எதிராக,40 அதிருப்தியாளர்கள்கோலாரில் ரகசிய இடத்தில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இதனால், கோலார் மாவட்ட பா.ஜ.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.,- ம.ஜ.த., கூட்டணி அமைந்துள்ளது. இருப்பினும் கோலாரில் பா.ஜ., - எம்.பி.,யாக முனிசாமி பதவி வகித்து வருவதால் கோலார் தொகுதியை பா.ஜ.,வுக்கு தான் ஒதுக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வினரின் கருத்தாக உள்ளது.
கோஷ்டிகள்
ஆனால், மீண்டும் பா.ஜ.,வேட்பாளராக முனிசாமிக்கு சீட் வழங்க கூடாது என்று அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தி மேலிடத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
'சட்டசபைத் தேர்தலின் போது, கோலார் மாவட்டத்தில் பா.ஜ.,வுக்குகிடைத்த தோல்விக்கு எம்.பி., முனிசாமி தான் பொறுப்பு. இவர், கட்சி முன்னோடிகளை மதிக்கவில்லை. அவரது செல்வாக்கை மட்டும் உயர்த்திக் கொள்ளவே, தன் பதவியை பயன்படுத்திக் கொண்டார். ஆனால், கட்சி வளர்ச்சியை கவனிக்க வில்லை.
'இதனால் மாலுார் மற்றும் தங்கவயல் ஆகிய இரு தொகுதிகளில் கோஷ்டிகள் உருவாகி, வெற்றி கைநழுவி போனது' என, அவரது எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
'கோலார் தொகுதியை பா.ஜ.,வுக்கு தான் ஒதுக்க வேண்டும். ஆனாலும் மீண்டும் முனிசாமிக்கு சீட் தர வேண்டாம். புதியவர் ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும்' என்றும் அதிருப்தியாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி கட்சியின் மேலிடத்துக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது.கட்டுப்பாடுள்ள கட்சி
கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் - டாக்டர் வேணுகோபால் கூறியதாவது,
கோலார் மாவட்ட பா.ஜ.,வில் கோஷ்டி என்பது கிடையாது. சிறு சிறு அதிருப்திகள் ஏற்படுவது சகஜம். கோலார் தொகுதியில் பா.ஜ., போட்டியிட சாத்தியம் உள்ளது. முனிசாமி எம்.பி.,யாக இருந்து வருகிறார். செயல் வீரராக இருந்து வருகிறார்.
ஆனால், அதிருப்தியாளர்கள் கூட்டம் நடத்தி இருப்பது பற்றி எனது கவனத்திற்கு வரவில்லை.பா.ஜ., ஆரம்பம் முதலே ஒழுக்கம், கட்டுப்பாடுள்ள கட்சி. இதனை அனைவருமே பின்பற்றி வருகின்றனர். கட்சி மேலிடமே அனைத்துக்குமே பெரியது. அவர்கள் முடிவே இறுதியானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பகிரங்கமாக அறிவிக்க வில்லை
கோலார் மாவட்ட பா.ஜ., முன்னோடிகள் கூட்டம் நடத்திய விவகாரம் எனது கவனத்துக்கு வரவில்லை. இதுபற்றி யாரும் பகிரங்கமாக தெரிவிக்கவும் இல்லை. யார் மனதில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. இந்த நிமிடம் வரை அதிருப்தி பற்றி எனக்கு தகவல் எதுவும் இல்லை.
முனிவெங்கடப்பா
கோலார் மாவட்ட பா.ஜ., செய்தி தொடர்பாளர்.

