ஷெட்டர் திடீர் முடிவு: லட்சுமி ஹெப்பால்கர் அதிருப்தி
ஷெட்டர் திடீர் முடிவு: லட்சுமி ஹெப்பால்கர் அதிருப்தி
ADDED : ஜன 27, 2024 12:02 AM

உடுப்பி, -முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரசை விட்டுச் சென்றது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, உடுப்பியில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு, காங்கிரஸ் சரியான அந்தஸ்து அளித்தது.
முந்தைய சட்டசபை தேர்தலில், 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற அவரை, காங்கிரஸ் மேலிடம் எம்.எல்.சி.,யாக்கியது. அவர் மீண்டும் பா.ஜ.,வுக்கு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது.
ஜெகதீஷ் ஷெட்டருக்காக, உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்தனர். அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. காங்கிரசை விட்டு விலக என்ன காரணம், யார் காரணம் என்ற கேள்விகளுக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். அரசியலில் இது போன்று நடக்கக் கூடாது.
காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி எந்த காரணத்தை கொண்டும், கட்சியை விட்டுச் செல்லமாட்டார்.
எங்கள் கட்சியிலேயே நீடிப்பார். தன்மானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால், சவதி காங்கிரசுக்கு வந்தார். அவர் மீண்டும் பா.ஜ.,வுக்கு செல்லமாட்டார்.
மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையிலும் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.
இதற்கு எங்கள் அரசின் வாக்குறுதி திட்டங்களே காரணம்.
இதுவரை 100 கோடி பெண்கள், 'சக்தி' திட்டத்தின் லாபத்தை பெற்றுள்ளனர். வரும் நாட்களில் வாக்குறுதித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, பெண்களின் கருத்துகளை தெரிந்து கொள்வோம்.
இம்முறை லோக்சபா தேர்தலில், திறன் பெற்ற வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்.
பிப்ரவரி 15க்கு பின், வேட்பாளர்கள் தேர்வு குறித்து, மற்றொரு சுற்று ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

