பள்ளி ஆசிரியை கொன்று புதைப்பு மாயமான வாலிபருக்கு வலை
பள்ளி ஆசிரியை கொன்று புதைப்பு மாயமான வாலிபருக்கு வலை
ADDED : ஜன 24, 2024 01:10 AM

மாண்டியா, கர்நாடகாவில், மாயமான பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டு உள்ளார். மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ், 35. இவரது மனைவி தீபிகா, 28. இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில், தீபிகா ஆசிரியையாக பணியாற்றினார். 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 20ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.
மதியம் வீட்டிற்கு வந்து விடுவதாக, கணவரிடம் கூறியிருந்தார்.
ஆனால், இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த லோகேஷ், தீபிகாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்தபோது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
மேலுகோட் சென்று தீபிகாவை பல இடங்களில் தேடினார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மேலுகோட் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, தீபிகாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவில் மலை அடிவாரத்தில், தீபிகாவின் ஸ்கூட்டர் தனியாக நின்றது. தகவல் அறிந்ததும் லோகேஷும், அவரது குடும்பத்தினரும் அங்கு சென்றனர்.
அப்போது மலை அடிவாரத்தில் அழுகிய நிலையில், தீபிகா இறந்து கிடந்தார். அவரது உடல் பாதி புதைக்கப்பட்டு இருந்தது. தீபிகாவை, மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொன்று புதைத்ததாக, போலீசாரிடம் லோகேஷ் கூறினார்.
தீபிகாவின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்பை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த வாலிபருடன், தீபிகா அடிக்கடி பேசியது தெரியவந்தது.
கடந்த 20ம் தேதி தீபிகாவும், ஒரு வாலிபரும் மலை அடிவாரத்தில் நின்று, சண்டை போடுவதை கோவிலுக்கு வந்த சிலர், மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவும், போலீசார் கையில் கிடைத்துள்ளது. அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

