கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் துவக்கம்! மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் துவக்கம்! மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 19, 2024 12:45 AM

பெங்களூரு : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டங்களில், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது போல், பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்கள், 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சுரக் ஷய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும், பார்லிமென்டின் இரு சபைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.
10 ஆண்டு சிறை
இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதில், 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தில் வாகன விபத்து தொடர்பான, சட்ட திருத்தம் இடம் பெற்றுள்ளது. அதில், சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுனர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் லாரி, கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், 'புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி 17 நள்ளிரவில் இருந்து, கர்நாடகாவில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கும்' என்று, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நவீன்ரெட்டி அறிவித்து இருந்தார்.
போராட்டம் தொடரும்
இதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில், லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. எட்டு லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், கலபுரகி உட்பட மாநிலம் முழுதும், யார்டுகளில் லாரிகளை டிரைவர்கள் நிறுத்தினர்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வது தடைப்பட்டு உள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த போராட்டம் குறித்து, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நவீன்ரெட்டி நேற்று அளித்த பேட்டி:
வாகன விபத்து தொடர்பான, புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தும் துவங்கி உள்ளது. இதில், 85 சதவீதம் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. மற்ற 15 சதவீதம் லாரிகள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டும் இயக்கப்படுகின்றன.
போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று, போக்குவரத்து துறையிடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல் வந்தது.
ஆனால், இதுவரை எங்களை யாரும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. லாரிகள் வேலை நிறுத்தத்தில் நாங்கள் ஈடுபடாவிட்டால், டிரைவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், லாரி வேலை நிறுத்தம் செய்யும்படி, அந்தந்த மாநிலங்களின் தலைவர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை அழைத்து பேசும் வரை, வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

