மனைவிக்கு காதலனுடன் திருமணம்; உயிர் பயத்தில் கணவர் திடீர் முடிவு
மனைவிக்கு காதலனுடன் திருமணம்; உயிர் பயத்தில் கணவர் திடீர் முடிவு
ADDED : மார் 28, 2025 06:45 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மீரட்டில், தன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று, உடலை துண்டாக்கி, அதை பெரிய டிரம்மில் மனைவி வைத்தார்.
அதுபோல, அவுராயியாவில், கட்டாய திருமணம் செய்து வைத்ததால், திருமணமான இரண்டு வாரங்களில், தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரை இளம் பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், சந்த் கபிர் நகரில் உள்ள கடார் ஜாட் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பப்லு, தன் மனைவியை அவருடைய காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார். திருமணத்தை அவரே முன்னின்றி நடத்தி வைத்துள்ளார்.
கடந்த, 2017ல் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகாவை திருமணம் செய்த பப்லுவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளியூரில் வேலை செய்து வந்த பப்லுவுக்கு, அவரது மனைவிக்கும், அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊருக்கு திரும்பிய அவர், இது குறித்து விசாரித்தார். அப்போது தன் மனைவி, 18 மாதங்களாக மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை, அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குழந்தைகளை தானே வளர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால், இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.