மாற்றப்படுவாரா முதல்வர் பினராயி விஜயன்? இடைத்தேர்தல் தோல்வியால் கட்சியில் புகைச்சல்!
மாற்றப்படுவாரா முதல்வர் பினராயி விஜயன்? இடைத்தேர்தல் தோல்வியால் கட்சியில் புகைச்சல்!
ADDED : ஜூன் 24, 2025 11:22 PM

கேரளாவின் நிலம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., படுதோல்வி அடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் செல்வாக்கு சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'ஹாட்ரிக்' வெற்றி
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு, 2026 ஏப்ரலில் தேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன், 'ஹாட்ரிக்' வெற்றியை எதிர்பார்த்து உள்ளார்.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீவிரமாக உள்ளது.
கேரளாவை பொறுத்தவரை பா.ஜ., மூன்றாவது கட்சியாக இருந்தாலும், தேர்தல் என வந்து விட்டால், மார்க்.கம்யூ., - காங்., இடையே தான் நேரடி போட்டி இருக்கும்.
கடந்த 19ல், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மார்க்.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ஸ்வராஜை ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஆர்யாதன் சவுகத், 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், அதை காங்., முறியடித்துள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியையும், புது நம்பிக்கையையும் அளித்துள்ளது. ஆளும் மார்க்.கம்யூ., கட்சிக்கு ஏமாற்றத்தையும், அச்சத்தையும் தந்துள்ளது.
தர்மசங்கடம்
முதல்வர் பினராயி விஜயனின் இரண்டாவது பதவிக்காலத்தில் நடந்த, மூன்று சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களை விட, நிலம்பூர் இடைத்தேர்தல் தோல்வி ஆளுங்கட்சிக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால், இடைத்தேர்தலுக்கு முன்னரே, அந்த மூன்று தொகுதி களும் ஐக்கிய ஜனநாயக முன்னணி வசம் இருந்தன. இடைத்தேர்லிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணியே வென்றது. ஆனால், நிலம்பூர் இடைத்தேர்தல் கதை வேறு.
ஆளும் மார்க்.கம்யூ., ஆதரவுடன் இரண்டு முறை அத்தொகுதியில் வென்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்த பி.வி.அன்வர், சர்வாதிகாரப் போக்குடன் முதல்வர் பினராயி விஜயன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மகள் வீணாவின் வணிகத்தை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் பினராயி விஜயன் சமரசம் செய்து கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசின் கேரள பிரிவில் இணைந்தார். நிலம்பூர் தொகுதியில் சுயேச்சையாக மீண்டும் போட்டியிட்ட அன்வர், வெறும் 11,000 ஓட்டுகளே பெற்றார்.
நிலம்பூர் இடைத்தேர்தல் தோல்வி, முதல்வர் பினராயி விஜயனுக்கும் தனிப்பட்ட தோல்வி. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முறியடிக்க அவர் தவறி விட்டார். இன்னும் நான்கு மாதங்களில், கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.
இதில் ஆளுங்கட்சி வெற்றி பெறாவிட்டால், அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக பினராயி விஜயனுக்கு பதில் வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் எழ துவங்கிவிட்டன.
- நமது சிறப்பு நிருபர் -