நெரிசல் மிகுந்த 12 சாலைகள் கண்டுபிடிப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் துவக்கம்
நெரிசல் மிகுந்த 12 சாலைகள் கண்டுபிடிப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 09:08 PM
புதுடில்லி:நெரிசல் மிகுந்த 12 சாலைகளை பொதுப்பணித் துறை அடையாளம் கண்டுள்ளது. இதில், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச எல்லையில் இரண்டு சாலைகளும் அமைந்துள்ளன. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில், டில்லி மாநகரில் நெரிசல் மிகுந்த, 12 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வடக்கு டில்லி மங்கி பாலத்திலிருந்து மஜ்னு கா திலா வரையிலான ரிங் ரோட்டில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. ரிங் ரோட்டின் முடிவில் துவங்கும் பைபாஸ் சாலை செங்கோட்டையை சலிம்கர் கோட்டையுடன் இணைக்கிறது. அங்கிருந்து காஷ்மீரி கேட் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் செல்லும் பழைய பாலத்தின் கீழ் பகுதி வரையிலும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
அதேபோல, ஆசாத்பூர் மண்டி அருகே கிராண்ட் டிரங்க் சாலை மற்றும் லிபாஸ்பூர் சுரங்கப் பாதை ஆகிய இடங்களிலும் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய டில்லி ஜான்ஸி ராணி சாலை மற்றும் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் துவங்கி பிலிமிஸ்தான் சினிமா வரையிலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு நெரிசலைக் குறைக்க 2018ல் மேம்பாலம் கட்டியும் நெரிசல் குறையவில்லை.
மாலை நெரிசல் நேரங்களில் இந்த மேம்பாலம் வழியாக ஐ.எஸ்.பி.டி., சிவில் லைன்ஸ் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல, ஜண்டேவாலன் கோவில் அருகே ஜான்ஸி ராணி சாலையுடன் இணைக்கும் பஞ்ச்குயன் மார்க்கிலும் கடும் நெரிசல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வடகிழக்கு டில்லியில், டில்லி - -உத்தரபிரதேச எல்லையில் சவுத்ரி சரண் சிங் மார்க்கில், காஜிபூர் குப்பைக் கிடங்கு அருகில் இருந்து ஆனந்த் விஹார் மற்றும் தில்ஷாத் கார்டன் வரை வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன. இந்தச் சாலையில் இரண்டு மேம்பாலங்கள் இருந்தாலும் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது.
புஸ்தா சாலையில் நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தெற்கு டில்லியில் ஐ.ஐ.டி., மேம்பாலத்தில் துவங்கி மோடி மில் மேம்பாலம் செல்லும் வெளிப்புற ரிங் ரோட்டின் தரம் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் இங்கு நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க மறுசீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தேரியா மோர் மற்றும் அய நகர் வரையிலான மெஹ்ராலி- - குருகிராம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ளது.
நெரிசலைக் குறைக்க செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் சாலை விரிவாக்கம் குறித்து திட்டமிடும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தவுலா குவான் வரையிலான ரிங் ரோடு, ஜாகிரா மேம்பாலத்திலிருந்து ரோஹ்தக் சாலை மற்றும் ஜாகிராவிலிருந்து துவாரகா மோர் வரையிலான சிவாஜி மார்க் ஆகிய சாலைகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
முதல்வர் ரேகா குப்தாவின் ஷாலிமர் பாக் தொகுதியில், பீதம்பூராவிலிருந்து சிங்லாப்பூர் வரையிலான சாலையில், விரிவாக்கப் பணிகளை பொதுப்பணித் துறை செய்யும். அதற்கான நிலம் கேட்டு டில்லி மேம்பாட்டு ஆணையத்துடன் பொதுப்பணித்துறை பேச்சு நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.