ADDED : ஜன 19, 2024 12:35 AM
மைசூரு : முதல்வர் சித்தராமையாவின் சொந்த தொகுதியில், வேலை கேட்டு மொபைல் போன் டவரில் ஏறி, தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு மாவட்டம் வருணா அருகே உள்ள, சித்தராமயனஹுண்டி கிராமம் ஆகும். இந்நிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் வருணா கிராமத்தில் உள்ள, மொபைல் போன் டவர் உச்சிக்கு ஒருவர் ஏறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், வருணா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார், அந்த நபரிடம் பேச்சு நடத்தினர். 'எனக்கு வேலை போய் விட்டது. இதனால் எனக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து குதித்து, தற்கொலை செய்வேன்' என்று மிரட்டினார். அவரிடம் போலீசார் சமாதானம் பேசி கீழே இறங்க வைத்தனர். பின், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அந்த நபர் கே.ஆர்.நகர் சித்தனகொப்பலு கிராமத்தின் பீரேகவுடா, 42 என்பது தெரிந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்க்கரை ஆலையில் மெக்கானிக்கல் பிரிவில் வேலை செய்து உள்ளார். தனக்கு உதவியாக ஒருவரை பணியில் நியமிக்க வேண்டும் என்று, சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரிடம் கேட்டு உள்ளார்.
அவர்கள் மறுத்ததால் தகராறு செய்திருக்கிறார். இதனால் பீரேகவுடாவை பணியில் இருந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு நீக்கி உள்ளனர்.
இதற்கு நியாயம் கேட்டும், வேலை வேண்டியும், மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்து உள்ளது.

