ADDED : செப் 23, 2025 04:21 AM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் தி.மு.க., சார்பில் நடந்த ஓரணியில் தமிழகம் உறுதிமொழி ஏற்பு கூட்டத்தில், ''தி.மு.க.,வை விமர்சிக்கும் விஜய்க்கும், எதிர்காலத்தில் நாம் ராஜ்யசபா சீட் தரும் நிலை வரும்,'' என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அதிருப்தியடைய வைத்து உள்ளது.
பெரியகருப்பன் பேசியதாவது:
நடிகர் கமல் பல விருது பெற்ற நடிகர். அவரைப் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. என்றாலும், முதல்வர் அரவணைத்து ராஜ்யசபா எம்.பி., ஆக்கினார். தற்போது தி.மு.க.,வை விமர்சிக்கும் விஜய்க்கும், எதிர்காலத்தில் நாம் ராஜ்யசபா சீட் தரும் நிலை வரும்.
தி.மு.க.,வை எதிர்த்தவர்கள் பலரும் இப்போது தி.மு.க.,வில் தான் உள்ளனர். அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், தினகரன்அனைவரும் இருந்த நிலையில் கூட்டணி பலம் இருந்தும் ஜெயிக்க முடியாத பழனிசாமி, 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து முதல்வராவோம் என்று நினைக்கவில்லை.
அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் எதிர்பார்க்கிறார். கட்சியை தக்க வைத்துக் கொள்ளதான் பழனிசாமி திட்டமிட்டுஉள்ளார். இவ்வாறு பெரிய கருப்பன் பேசினார்.
கூட்டணி தலைவரை விமர்சிப்பதா?
இது குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நடிகர் விஜயை விமர்சித்துப் பேசுகிறோம் என்ற பெயரில் எங்கள் தலைவர் கமலை கிண்டல் செய்து பேசி உள்ளார் அமைச்சர் பெரிய கருப்பன். அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனம் வருந்தும்படி பேசக் கூடாது என முதல்வர் ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும். முக்கியமான காலகட்டத்தில் நடிகர் கமல், தி.மு.க., கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலில், தி.மு.க., 39 இடங்களை வெல்ல உதவிகரமாக இருந்தவர் என்பதை தி.மு.க.,வினர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.