போலீசாருக்கு எதிராக பரவும் வீடியோக்கள்: தேடிப்பிடித்து 'அப்டேட்' செய்வது அதிகரிப்பு
போலீசாருக்கு எதிராக பரவும் வீடியோக்கள்: தேடிப்பிடித்து 'அப்டேட்' செய்வது அதிகரிப்பு
UPDATED : ஜூலை 04, 2025 06:32 AM
ADDED : ஜூலை 04, 2025 01:24 AM

மதுரை: தமிழகத்தில் போலீசாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் வீடியோக்கள் பரவி வருகின்றன. பழைய வீடியோக்களை தேடிப் பிடித்து பலரும், 'அப்டேட்' செய்வதால் அதற்கு விளக்கம் சொல்லியே அதிகாரிகள் சோர்ந்து போகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார்.
இதையடுத்து போலீசார் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜனவரி, 14ல் ஆட்டோ டிரைவரை போலீசார் தாக்கிய வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.
இதுகுறித்து விளக்கமளித்த தேனி எஸ்.பி., சிவபிரசாத், 'ஆட்டோ டிரைவருக்கு காயமில்லை. ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
'போலீசார் பலப்பிரயோகம் செய்தது தெரியவந்தது. ஏ.டி.எஸ்.பி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்' என, விளக்கம் அளித்தார்.
இந்த வீடியோ சர்ச்சை ஓய்ந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு, கூடுதல் நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்களிடம், 'இதுக்கு மேல ஒழுங்கா இருக்கணும். கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்' என்று எஸ்.பி., கண்ணன் மிரட்டல் விடுத்த வீடியோ வேகமாக பரவியது.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் போலீசாருக்கு எதிராக வீடியோக்கள் அதிகம், 'அப்டேட்' செய்யப்பட்டு வருகின்றன. அவை பழையதா, புதியதா என ஆய்வு செய்யாமல், பலரும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கரூரில் புது மணப்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி, இன்ஸ்பெக்டர் திட்டி விரட்டும் வீடியோ; காஞ்சிபுரத்தில் ஏட்டு ஒருவர், அ.தி.மு.க., நிர்வாகியை தாக்க முற்படுவது; திருவள்ளூரில் கர்ப்பிணியை ஏட்டு அடிக்க பாய்ந்தது என, வீடியோக்கள் தொடர்ந்து வேகமாக பரவி வருகின்றன.
ஆரம்பத்தில் சில வீடியோக்களுக்கு உடனடியாக மறுப்பும், விளக்கமும் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள், 'இப்படி விளக்கம் சொல்லியே சோர்ந்து போய்விடுவோம்' எனக்கருதி தற்போது மவுனம் காத்து வருகின்றனர்.