ADDED : செப் 23, 2025 07:35 AM
புதுச்சேரி : தனியார் நிறுவன துப்புரவு தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், குப்பை அகற்றும் பணி பாதித்தது.
புதுச்சேரியில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சூப்பர்வைசர், துப்பரவு தொழிலாளர்களிடம் பணம் வசூலிப்பதாகவும், குப்பையை அகற்ற கடைகளில் மாமுல் பெறுவதாகவும் புகார் எழுந்தது. அதனால், சம்மந்தப்பட்ட சூப்பர்வைசர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
பிற கண்காணிப்பாளர்கள் நேற்று திடீரென சம்பள உயர்வு கேட்டு குப்பை அள்ளும் வாகனங்களை இயக்காமல் மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், நிர்வாகம் தரப்பில் துணைத் தலைவர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேநேரத்தில், துப்புரவு தொழிலாளர்கள், சம்பளத்தை உயர்த்தி, குறித்த தேதியில் வழங்க வலியுறுத்தி ராஜிவ் சதுக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தில் நகரில் குப்பை அகற்றும் பணி பாதித்தது.





