ADDED : நவ 27, 2024 11:22 PM
நெட்டப்பாக்கம், : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் இல்லாமல் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
ஏம்பலம் தொகுதி, கரிக்கலாம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்கு, பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், இப்பள்ளிக்கு விளையாட்டு திடல் இல்லாததால், மாணவர்கள் வெளியில் சென்று விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். அதே சமயத்தில் மாணவிகள், மாலையில் பள்ளி முடிந்து 5 கி.மீ தொலைவில் உள்ள ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.
மாணவிகளை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைத்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





