சென்னை:கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை ஒட்டி, சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான, சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ்., அடையாறு, நேரு விளையாட்டு அரங்கம் முதல் ராஜ் பவன் வரையிலும், பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, 19 மற்றும் 20 ஆகிய இருநாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரிமோட் வாயிலாக இயக்கப்படும் மைக்ரோ - லைட், ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலுான்கள் சென்னை எல்லையில் பறக்க, ஜன., 1ம் தேதி முதல் பிப்., 29ம் வரை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

