/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வட மாநில இளைஞர்களிடம் பணம் பறித்த இருவர் கைது
/
வட மாநில இளைஞர்களிடம் பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஜன 21, 2024 05:32 AM
செங்கல்பட்டு: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஷெனாவுல், 40. இவர், செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி ஆசிரியர் காலனியில், உறவினர் முக்தார் என்பவருடன் தங்கி கட்டட வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஷெனாவுலை தாக்கி, அவரிடம் இருந்த மொபைல் போன், ௫,௦௦௦ ரூபாய் உள்ளிட்டவற்றை பறித்து, இருவரையும் கத்தியால் கிழித்து விட்டு தப்பினர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், நெம்மேலி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசாரை கண்டு தப்ப முயன்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், இருவரும் செங்கல்பட்டு அடுத்த மலானிநத்தம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 25, மேலேரிப்பாக்கம் கூட்டு சாலை நேரு நகர் பகுதியை சேர்ந்த கண்ணன், 34, என்பதும், வட மாநில இளைஞர்களிடம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய ராஜேஷ் தவறி விழுந்ததில், அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

