/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எங்கெங்கு அமைகிறது மீன் இறங்குதளம் செங்கை மாவட்ட மீனவர்கள் எதிர்பார்ப்பு
/
எங்கெங்கு அமைகிறது மீன் இறங்குதளம் செங்கை மாவட்ட மீனவர்கள் எதிர்பார்ப்பு
எங்கெங்கு அமைகிறது மீன் இறங்குதளம் செங்கை மாவட்ட மீனவர்கள் எதிர்பார்ப்பு
எங்கெங்கு அமைகிறது மீன் இறங்குதளம் செங்கை மாவட்ட மீனவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 26, 2025 01:39 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மீனவர்களின் பொருளாதாரம், மீன்பிடி தொழில் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக, மீன் இறங்கு தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த மீன் இறங்கு தளம் எங்கெங்கு அமைக்கப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை பாரம்பரிய முக்கிய தொழில்களாக உள்ளன.
கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு, ஆலம்பரைகுப்பம் வரையுள்ள 36 மீனவ பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர். 7,500க்கும் மேற்பட்டோர், வங்க கடலில் மீன் பிடித்து விற்று, வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
மீனவர்கள் முற்காலத்தில், கட்டுமரத்தில் கடலுக்குச் சென்று மீன் பிடித்தனர்.
நாளடைவில் பைபர் மோட்டார் படகுகள், 'லாஞ்ச்' எனப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அறிமுகமாகி, அவற்றை பயன்படுத்துகின்றனர்.
மீன்பிடி படகு, வலை, பாதுகாப்பு கவச உடை, டீசல் ஆகியவற்றை மானிய விலையில், மீன்வளத்துறை வழங்குகிறது.
ஒவ்வொரு மீனவ பகுதியிலும், மீனவ கூட்டுறவு சங்கங்கள், ஆண், பெண் என, தனித்தனியாக இயங்குகின்றன.
சங்க உறுப்பினர்களுக்கு, மீன்பிடி குறைவு கால மானியமாக, தலா 6,000 ரூபாய், சேமிப்பு தொகை மற்றும் மானியம் என, தலா 3,000 ரூபாய், மீன்பிடி தடைகால நிவாரணமாக, மத்திய அரசின் பங்களிப்பு தலா 1,500 ரூபாய், மாநில அரசின் பங்களிப்பு 6,500 ரூபாய் என, மொத்தம் தலா, 8,000 ரூபாய், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இச்சூழலில், இயற்கை இடர்ப்பாடாக, நீண்ட காலமாக கடலரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், மீனவ பகுதிகளில், பல்வேறு வசதிகளுடன் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டுமென மீனவர்கள், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசும், செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன் இறங்குதளம் அமைப்பதாக, சட்டசபையில் சமீபத்தில் அறிவித்துள்ளது.
* மீன் இறங்குதள வசதிகள்
மீன்பிடி வலை பின்னல் கூடங்கள், மீன் ஏலம் விடும் கூடங்கள், பொருட்கள் பாதுகாப்பு கூடங்கள், மீன்களை பாதுகாக்கும் கூடம், குளிர்பதன கிடங்கு, மீன் பதப்படுத்தும் கிடங்கு, எரிபொருள் கலன், நிர்வாக அலுவலகம், வங்கி கிளை அலுவலகம், மின்சார அறை, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட வசதிகள், மீன் இறங்குதளத்தில் இருக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கோவளம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார், பனையூர், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட மீனவ பகுதிகள் உள்ளன. இந்நிலையில், இந்த மீன் இறங்குதளம் திட்டம் எங்கெங்கு செயல்படுத்தப்படும் என, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன் இறங்குதளம் அமைப்பதாக, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இத்தளம் மீனவர்களுக்கு பயன் அளிக்கும். எங்கள் பகுதியில் அமைத்த மீன் இறங்குதளம், கடலரிப்பை கவனத்தில் கொள்ளாமல் அமைக்கப்பட்டதால், கடலரிப்பால் சேதமடைந்து வீணானது. மீன்வளத்துறையினர், கடலரிப்பையும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு, மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும்.
- டி.ஜெய்சங்கர்,
மீனவர், கடலுார் பெரியகுப்பம்.