/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எந்த ஊருக்கு எந்த சாலையில் செல்வது? -நெம்மேலி சந்திப்பில் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
/
எந்த ஊருக்கு எந்த சாலையில் செல்வது? -நெம்மேலி சந்திப்பில் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
எந்த ஊருக்கு எந்த சாலையில் செல்வது? -நெம்மேலி சந்திப்பில் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
எந்த ஊருக்கு எந்த சாலையில் செல்வது? -நெம்மேலி சந்திப்பில் விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 24, 2024 01:18 AM

திருப்போரூர்:பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கி.மீ. துாரம் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின் போது, இச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் காரணமாகவும், மென்பொருள் பூங்காவில் தொடங்கப்பட்ட மென் பொருள் நிறுவனங்களின் வருகை காரணமாகவும், இப்பகுதி மேலும் வளர்ந்தது.
எனவே, கடந்த 2011ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் 110 விதியின் கீழ் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில், படூர் -- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கம்- - ஆலத்துார் ஊராட்சி வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது, இரண்டு புறவழிச் சாலைகளும், 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், திருப்போரூர் -- ஆலத்துார் இடையில் நடைபெறும் புறவழிச்சாலை பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இச்சாலையில் தற்போது கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
காலவாக்கத்தில் ஓ.எம்.ஆர். சாலை- - ஆறுவழிச்சாலை; திருப்போரூரில் நெம்மேலி சாலை- - ஆறுவழிச்சாலை; வெங்கலேரியில் ஓ.எம்.ஆர். சாலை- - ஆறுவழிச்சாலை ஆகிய மூன்று சந்திப்பு பகுதிகளில், சிறிய மற்றும் பெரிய அளவில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திருப்போரூரில் நெம்மேலி சாலை- - ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் வந்த பின், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சார் - பதிவாளர் அலுவலகம், ஓ.எம்.ஆர். சாலை, செங்கல்பட்டு சாலை, இ.சி.ஆர். சாலை சார்ந்த பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில், வழி தெரியாதவர்கள் இச்சாலை சந்திப்பில் வந்த பின் குழப்பமடைகின்றனர். திடீரென சாலையில் நின்று, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, தாங்கள் செல்லும் பகுதிக்கான வழியை கேட்க வேண்டியுள்ளது.
வழிகாட்டி பலகை அங்கு அமைக்காததால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதுடன் அங்கு விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, மேற்கண்ட நான்கு முனை சந்திப்பு பகுதியில் வழிகாட்டி பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

