/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
* 4 மாவட்டங்களில் வெள்ள தடுப்புக்கு ரூ.324 கோடியில்... திட்டம்!
/
* 4 மாவட்டங்களில் வெள்ள தடுப்புக்கு ரூ.324 கோடியில்... திட்டம்!
* 4 மாவட்டங்களில் வெள்ள தடுப்புக்கு ரூ.324 கோடியில்... திட்டம்!
* 4 மாவட்டங்களில் வெள்ள தடுப்புக்கு ரூ.324 கோடியில்... திட்டம்!
ADDED : பிப் 06, 2024 12:38 AM
நீர்வள ஆதாரத் துறையின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய, 324 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டு உள்ளன.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் இருந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
அதேசமயம், ஏரி, ஆறு போன்றவை வாயிலாக ஏற்படும் வெள்ள தடுப்பு பணிகளை, நீர்வள ஆதார துறையே பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை, பல ஆண்டுகளாகவே செய்து வருகிறது. தரைக்கு கீழ் மூடுகால்வாய் அமைப்பது, வெள்ள தடுப்பு சுவர் கட்டுவது, ஏரிகளின் கரைகளை பலப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை நீர்வள ஆதாரத்துறையினர் தொடர்ந்து மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில், கடந்த டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பை சரி செய்யவும், பிற வகையான வெள்ள தடுப்பு பணிகளை செய்யவும் நீர்வள ஆதாரத்துறை, 324 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் துவங்க உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அடையாற்றின் கால்வாயை ஆழப்படுத்துவது, சென்னை மாவட்டத்தில் சோழவரம், செங்குன்றம் ஏரிகளை சீரமைப்பது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் கரைகளை சீரமைப்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இடங்களில் மூடு கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள், நீர்வள ஆதார துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகாவிலேயே, மூன்று இடங்களில் 65.8 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இடங்களில், தரைக்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட்டால் ஆன மூடு கால்வாய் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், சென்னை மாவட்டத்தில், நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, பெரிய அளவில், 39 கோடி ரூபாய் மதிப்பில் மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'செங்கல்பட்டு தாலுகாவில் மூன்று இடங்களில் மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஏரிக்கும் பிற ஏரிக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தி மழைநீர் வடிய வைக்கவே இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. டெண்டர் நிலையில் உள்ள இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்' என்றார்.
சிட்டி/
திருப்புகழ் குழு பரிந்துரை செயலாக்கம்
*நிரந்தர சீரமைப்புக்கு ரூ.350கோடி
சென்னை, பிப். 6-
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் குழு பரிந்துரைப்படி, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிக்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக சேதங்களை சந்தித்து வருகின்றன.
இம்மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பிற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், அரசால் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் வழங்கிய பரிந்துரைப்படி நகராட்சி நிர்வாகம், நீர்வளம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் வாயிலாக மழைநீர் கால்வாய், சிறுபாலம், ரெகுலேட்டர்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிட்டுள்ளது. ஆனால், 2023 டிசம்பரில்,'மிக்ஜாம்' புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டது. தென்சென்னை பகுதிகளில், வெள்ளநீர் வடிவதற்கு, 15 நாட்களுக்கும் மேலானது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் திருப்புகழ் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை வழங்கினர்.
இதை செயல்படுத்தும் வகையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்கு, சென்னை மண்டல நீர்வளத் துறைக்கு, 350 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில், செம்பாக்கம் உபரிநீர் கால்வாயில் இருந்து நன்மங்கலம் ஏரி வரை, 24.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது.
மூவசரம்பேட்டை ஏரி முதல் கீழ்க்கட்டளை கால்வாய் வரை, 30.6 கோடியில் மூடுகால்வாய், நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 39.8 கோடியில் இரண்டு வழி சிறு கால்வாய், நேமம் ஏரியில் உபரிநீர் கால்வாய் ரெகுலேட்டர் மற்றும் சேதமடைந்த கரை சீரமைப்பு 12.2 கோடி ரூபாய், புரசைவாக்கம் அருகே கூவம் கரை புனரமைப்பு பணிகள் 17.,3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் சேதமடைந்த கரைகளை சீரமைக்கும் பணிகள் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவை உட்பட மேலும் பல பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை துவங்க நீர்வளத்துறை ஏற்பாடுகளை துவங்கியுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
***
குடிநீர் வினியோகம் சீராக்க
'ரிங் பைப் லைன்' திட்டம்
சென்னை, பிப். 6-
''சென்னையில் குடிநீர் வினியோகத்தை சீராக்க, 'ரிங் பைப் லைன்' திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு கூறியதாவது:
சென்னையில் வரி வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகள் சரியாக இருக்கிறதா, கட்டடத்தின் அளவுகள் சரியாக உள்ளதா, கூடுதலாக இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், பெரிய கட்டடங்களின் உரிமையாளர்களிடம் முதலில் வரிவசூல் செய்யுங்கள், அதற்குபின், மக்களிடம் சென்று வரிவசூல் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக, யாருக்கும் சிரமமில்லாமல் மாநகராட்சி வருவாய் துறை வரி வசூலித்து வருகிறது.
கடந்தாண்டு, இதே நாளில் வசூலிக்கப்பட்ட வரியை விட, இந்தாண்டு 8 முதல் 10 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. நிதி சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டப்படி எவ்வாறு செய்ய வேண்டுமோ, அவ்வாறு தான் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரமானது பரந்து விரிந்துள்ளது. இதில், வீராணம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து, நீராதாரங்களில் இருந்தும் வரும் தண்ணீரை சுத்தப்படுத்தி அனுப்புகிறபோது, ஒருசில இடங்களில் தாமதம் ஏற்படும்போது, சில பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, சென்னையை சுற்றி அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி கொண்டு செல்லும் வகையில், ரிங் ரோடு போடுவது போல், 'ரிங் பைப் லைன்' திட்டம் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால், தண்ணீர் சீராக வினியோகிக்கும் பொறுப்பினை, சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர் -

