/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கேலோ இந்தியா; மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
கோவையில் கேலோ இந்தியா; மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 19, 2024 04:18 AM
கோவை : கோவையில் கேலோ இந்தியா கூடைப்பந்து மற்றும் 'தாங் டா' போட்டிகள் நடக்கவுள்ள பி.எஸ்.ஜி,. மருத்துவ கல்லுாரி மைதானத்தை மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் தேசிய அளவிலானகேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், இந்தாண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகத்தில் நடக்கிறது.
இதில், 28 வகையான விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு நகரங்களில் இன்று (ஜன.,19) துவங்கி வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக கூடைப்பந்து போட்டி ஜன., 21ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 'தாங் டா' வரும், 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் கோவை, பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவமனை உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதையடுத்து போட்டிகள் நடைபெறும் இடத்தில் உள்கட்டமைப்பு நிலை, வரவேற்பு நெறிமுறை, போக்குவரத்து, குடிநீர் வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ சேவைகள், தங்குமிடம், உணவு வசதி, கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதி உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

